
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 22வது போட்டி, பஞ்சாப்பில் உள்ள எம். ஒய். சிங் மைதானத்தில் இன்று (08.04.2025) இரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 219 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்களை அதிரடியாக விளாசினார். ஷாஷாங்க் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 52 ரன்களையும், அதே போன்று மார்கோ ஜான்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 34 ரன்களையும் எடுத்தனர். எனவே சென்னை அணி வெற்றி பெற 220 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. இருப்பினும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக டேவன் கான்வாய் 49 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். சிவம் துபே 27 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். மேலும் ரச்சின் ரவிந்த்ரா 23 பந்துகளில் 36 ரன்களையும் குவித்தார். இதனால் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் பிரியான்ஷ் ஆர்யா தனது அற்புதமான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அதே சமயம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பஞ்சாப் அணி வீரர் பிரியான்ஸ் ஆர்யா இன்று படைத்தார். அதாவது இன்றைய போட்டியில் 39 பந்துகளில் அவர் சதம் அடித்தார். முன்னதாக இன்று மாலை நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றது குறிப்பிடத்தக்கது.