Skip to main content

'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

milkha singh

 

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் 'மில்கா சிங்', ஒன்றிணைந்த இந்தியாவில் (இன்றைய பாகிஸ்தான்) பிறந்தவர். 1947ஆம் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடைபெற்ற கலவரத்தில் தனது பெற்றோர்களை இழந்தார். கலவரத்தில் தப்பி டெல்லிக்கு வந்த மில்கா சிங், இந்தியா இராணுவத்தில் இணைந்தார்.

 

இந்திய இராணுவத்தில் இணைந்த பிறகு அவரது தடகள வழக்கை தொடங்கியது. தடகளத்தில் பல்வேறு சாதனைகளை செய்தார் மில்கா சிங். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற மில்கா சிங், 1960ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் சிறிய வித்தியாசத்தில் வெண்கல பதக்கத்தைத் தவறவிட்டார். தடகளத்தில் பல்வேறு சாதனைகளை செய்த மில்கா சிங், ‘பறக்கும் சீக்கியர்’ என இந்தியர்களால் கொண்டாடப்பட்டார்.

 

இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்த மில்கா சிங்கிற்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், கரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் கரோனாவிற்குப் பிந்தைய பாதிப்பால் நேற்று (18.06.2021) இரவு மறைந்தார். மில்கா சிங்கின் மனைவி கரோனா பாதிப்பால், ஐந்து நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மில்கா சிங்கின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மில்கா சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நாட்டின் கனவுகளைக் கைப்பற்றிய, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றிருந்த ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம். அவரது எழுச்சியூட்டும் பண்பு மில்லியன் கணக்கானவர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அவரின் இழப்பு பெருந்துயரம்" என தெரிவித்துள்ளார்.