
சென்னையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றுக்கான விளையாட்டு பயிற்சிக்கூடத்தினை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின், “இன்று எனக்கு மிக முக்கியமான நாள். ஏனென்றால், ரொம்ப நாளாகவே பிறருக்கு பயிற்சி அளிப்பது என்பது கனவாக இருந்தது. அதை எப்பொழுது செய்ய ஆரம்பித்தேனோ அப்பொழுதில் இருந்து என் கிரிக்கெட்டிலும் வளர்ச்சி ஏற்பட்டது. இதில் நான் பார்த்தவரை நான் கண்ட விஷயம் விளையாட வரும் மாணவர்களில் பலரால் பணம் செலவு செய்து விளையாட முடியவில்லை.
கிரிக்கெட் கிட் வாங்க வேண்டும் என்றாலும் கோச்சிங் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்றாலும் பணம் கட்ட வேண்டும். ஏனென்றால் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு விலை அதிகம். வரும் 10 மாணவர்களில் 8 மாணவர்களுக்கு அந்த திறன் இருக்காது. இதை நெடுநாட்களாக வலியுறுத்தி வந்தேன்.
இப்பொழுது விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்தபின் தற்போது இது நடந்துள்ளது. இது எனக்கு மிக முக்கியமான நாள். இம்மாதிரியான திட்டங்களில் இருந்து வரும் மாணவர்களை இந்தியாவிற்கோ அல்லது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கோ ஆட வைக்க வேண்டும் என்பது என் கனவு” எனக் கூறியுள்ளார்.