Skip to main content

அம்பதி ராயுடுவுக்கு தடை விதித்த ஐசிசி...

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

hgjnfyhjn

 

இந்திய வீரர் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து ஐசிசி இன்று உத்தரவிட்டுள்ளது. இந்திய, ஆஸ்திரேலய அணிகள் மோதிய ஒரு நாள் தொடரின்போது, சிட்னியில் நடந்த முதல் போட்டியில் அம்பதி ராயுடு பந்துவீசினார். அவரின் அந்த பந்துவீச்சு ஐசிசி விதிமுறைகளுக்கு முரணானது எனவும், ஐசிசி பந்துவீசும் விதிகளுக்கு உட்பட்டு இல்லை என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை விதித்து ஐசிசி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஐசிசி வழங்கிய 14 நாட்களில் அம்பதி ராயுடு தனது பந்துவீச்சைச் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்யவில்லை. எனவே ஐசிசி விதி 4.2 ன்படி,அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது. மேலும் அம்பதி ராயுடு தனது பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தி பந்துவீச்சு முறையை தெளிவுபடுத்தும் வரை இந்த தடை அமலில் இருக்கும். மேலும் அவர் உள்நாட்டுப் போட்டிகளில் பந்துவீச எந்தவித தடையும் இல்லை'  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

8 நாளில் முடிவுக்கு வந்த அரசியல்; ஆந்திராவை அதிரச் செய்த அம்பத்தி ராயுடு

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Ambati Rayudu has announced his resignation from YSR Congress Party

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடி வந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு கடந்த 28 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆந்திர அரசியலில் கால் பதித்த அம்பத்தி ராயுடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Ambati Rayudu who set foot in Andhra politics

நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். அதே சமயம் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.