Skip to main content

"காரில் போகக்கூடாது, நடந்துதான் போகணும்"... இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காரை மடக்கிய போலீஸார்...

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

cricketer robin singhs car seized by chennai police

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், ஊரடங்கு விதிகளை மீறியதாகச் சென்னை போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகச் சென்னை உள்ளிட்ட  பல  பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காய்கறி வாங்குவதற்காகத் தனது வாகனத்தில் சென்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் விதிமுறைகளை மீறியதாகச் சென்னை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

 

கடந்த சனிக்கிழமை அன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தனது வாகனத்தில் சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து திருவான்மியூர் பகுதிக்குக் காய்கறி வாங்கச் சென்றுள்ளார். அப்போது சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீஸார் அவரது வாகனத்தை வழிமறித்துள்ளனர். அவர் எங்குச் செல்கிறார் என போலீஸார் விசாரிக்கையில், காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறியுள்ளார். மாஸ்க் அணிந்திருந்ததால், அவரை அடையாளம் கண்டறியாத போலீஸார், விதிமுறைகளின்படி அத்தியாவசியப் பொருட்களை வாங்க நடந்துதான் செல்ல வேண்டும்  வாகனத்தில் செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்ததால், வேறொருவரை வரவழைத்து அவரது வாகனத்தில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார் ராபின் சிங்.

 

இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "சனிக்கிழமை காலை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) இருந்து ராபின் சிங் வாகனம் வருவதைக் கண்டோம். சோதனை செய்தபோது, அவர் தனது வாகனத்தில் பயணிக்க இ-பாஸ் வைத்திருக்கவில்லை, பயணத்திற்கான எந்தவொரு சரியான காரணமும் இல்லை. அவர் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார். நாங்களும் விதிமுறைகளின்படி, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்தோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister MK Stalin propaganda In Chennai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று (17.04.2024) மாலை 4 மணிக்கு தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.