Skip to main content

துணை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு; ஆன்லைனில் அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!!

Published on 02/10/2020 | Edited on 03/10/2020

 

 

nursing and b.pharm students apply now

பி.எஸ்சி., நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் ஆன்லைனில் புதன்கிழமை (அக்.1) வெளியிட்டுள்ளது. அக். 17- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அக். 15- ஆம் தேதி, மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 

இளங்கலை மருந்தாளுநர் (பி.ஃபார்ம்), பிஸியோதெரபி, ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி, பி.எஸ்சி பிரிவில் நர்சிங், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, பி.ஓ.டி., உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

இதற்கான விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து அக்.1- ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

சேர்க்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளங்கள் வாயிலாகவே வெளியிடப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளங்களை அடிக்கடி பார்வையிட அறிவுறுத்தப்படுகின்றனர். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

 

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவின் கீழ் சேர்க்கை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் கூடுதலாக 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினருக்கான பிரத்யேக படிவத்தை இணைக்காவிட்டால் அவ்விண்ணப்பதாரர்கள் சிறப்புப் பிரிவின் கீழ் கருதப்பட மாட்டார்கள்.

 

வயது விவரம்: 

அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும், வரும் டிசம்பர் 31- ஆம் தேதியன்று விண்ணப்பதாரர்கள் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

 

பி.எஸ்சி., நர்சிங் படிப்பைப் பொருத்தவரை, வரும் டிசம்பர் 31- ஆம் தேதிப்படி ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர் 30 வயது நிரம்பாதவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவினர் 35 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

 

பி.ஏஎஸ்எல்பி., எனப்படும் ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1.7.2020ம் தேதி நிலவரப்படி 25 வயது பூர்த்தி ஆகாதவராக இருத்தல் அவசியம்.

nursing and b.pharm students apply now

கல்வித்தகுதி

பிளஸ்2 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

மேல்நிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் அல்லது விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித பாடங்களை படித்திருத்தல் வேண்டும்.

 

இளங்கலை மருந்தாளுநர் (பி.ஃபார்ம்) மற்றும் பி.ஏஎஸ்எல்பி., படிப்புக்கு ஓ.சி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது கணித பாடங்களில் சராசரியாக 40 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் சமூகத்தினர் மேற்கண்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

 

பி.எஸ்சி., நர்சிங் படிப்பைப் பொருத்தவரை முதன்மைப் பாடங்களில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பட்டியல் பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை ஆப்டோமெட்ரி படிப்பில் சேர முதன்மைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

 

பிளஸ்2வில் தொழில்கல்வி, திறந்தவெளி பள்ளிகள் மற்றும் தனித்தேர்வராக படிப்பை முடித்தவர்கள் துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

 

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் 400 ரூபாய். இக்கட்டணத்தை வங்கி இணையதள சேவை மூலம் செலுத்த வேண்டும்.

 

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின், மேற்கண்ட இணையதளத்தில் அக்.17- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த பின், விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய முடியாது. முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

 

விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் பதிவேற்றுவது மட்டுமின்றி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான இணைப்புகளுடன் ஏ4 அளவுள்ள உறையில் வைத்து, 'செயலாளர், தேர்வுக்குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு மேற்கண்ட காலத்திற்குள் சேருமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.

 

மேலும் விவரங்களை மேலே குறிப்பிட்டுள்ள இணையதள தகவல் குறிப்பேட்டை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 


 

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.