Skip to main content

ராஜஸ்தானில் சிவன்; அச்சலேஸ்வர் மகாதேவ் மந்திர்!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
 achleshwar mahadev mandir

அச்சலேஸ்வர் மகாதேவ் மந்திர் என்கிற இந்த ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில், சிரோகி மாவட்டத்தில், மவுன்ட் அபுவுக்கு அருகில் உள்ளது. இதுவொரு சிவாலயம். அச்சல்கர் என்னும் கோட்டைக்கு வெளியே இது அமைந்துள்ளது. 9-ஆவது நூற்றாண்டில், பரமரா வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இதைக் கட்டியிருக்கிறார்கள். அச்சல்கர் கோட்டையைக் கட்டியவர்களும் அவர்கள்தான். 1452-ஆம் வருடத்தில் மகாரானா கும்பா என்ற அரசர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்.

"அச்சல்' என்றால் "நிலையானது' என்று பொருள். சமஸ்கிருத மொழியில் இந்த சொல்லுக்கு "நகராதது' என்று பொருள். அவ்வாறு ஒரே இடத்தில் நிலைபெற்று இருக்கக்கூடியவர் இந்த ஆலயத்தில் குடியிருக்கும் சிவனான அச்சலேஸ்வர். இவர் சுயம்பு மூர்த்தி. இந்த கோவிலில் சிவபெருமானின் கால் கட்டைவிரலை சிவலிங்க வடிவத்தில் மக்கள் வழிபடுகிறார்கள். அணுவுலை குவிமாடம் போல இந்த சிவலிங்கம் காட்சியளிக்கிறது. சிவலிங்கத்திற்கு எதிரே இருக்கும் நந்தி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது.

இந்த ஆலயத்தைப் பல்வேறு காலகட்டங்களில் முஸ்லிம் மன்னர்கள் தாக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஆலயத்தைக் காப்பாற்றுவதற்காக உண்டாக்கப் பட்டதுதான் இந்த நந்தி. இந்த கோவில் மவுன்ட் அபுவிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில், வடக்கு திசையில் அச்சல்கர் மலைச் சிகரத்தில் இருக்கிறது.

ஆலயத்திலிருக்கும் சிவலிங்கத்தில் ஒரு துளை உள்ளது. அதன்வழியாக எவ்வளவு நீரை ஊற்றினாலும் உள்ளே போய்க்கொண்டே யிருக்கும். அது எங்குபோய்ச் சேர்கிறதென்று இதுவரை யாருக்கும் தெரியாது. இந்த ஆலயத்தை "அர்த்த காசி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். அதற்கு "காசியில் பாதி' என்று பொருள். ஸ்கந்த புராணத்தில் சிவனது இருப்பிடமாக காசி கூறப்படுகிறது. அவர் இருக்கும் இன்னொரு இடமாக இந்த ஆலயம் கூறப்பட்டிருக்கிறது.

இங்கிருக்கும் நந்தியின் எடை நான்கு டன். அரசர்கள் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள தராசில் அமர்ந்து, தங்களுடைய எடைக்கேற்ப கடவுளுக்கு காணிக்கை சமர்ப்பிப்பார்கள். "நாட்டின் நலனுக்காகப் பணியாற்றுவேன்' என்று சத்தியம் செய்வார்கள். இந்த ஆலயத்தில் துவாரகாதீசருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. வராகருக்கும் சந்நிதி உள்ளது.நரசிம்மர், வாமனர், கசாபா (கூர்ம அவதாரம்), மச்சாவதாரம், ராமர், பரசுராமர், கிருஷ்ணர் ஆகிய திருவுருவச் சிலைகளும் இருக்கின்றன.

புராணகாலத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் கதை இது...

மவுன்ட் அபுவில் ஒரு பள்ளத்தாக்கு.அந்தப் பகுதியில் தவம் செய்துகொண்டிருந்த வசிஷ்ட முனிவரின் பசு பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. சரஸ்வதியையும் கங்கையையும் வேண்டிக்கொண்டார் வசிஷ்டர். அப்போது அந்த பள்ளத்தாக்கில் நீர் நிறைய, பசு மேலே வந்தது.பின்னர் மீண்டும் அதே சம்பவம் இன்னொரு நாள் நடந்தது. அப்போது வசிஷ்ட முனிவர் இமயமலையை வேண்டிக் கொள்ள, இமயமலை தன் மகன் நந்தி வரதனை அங்கு அனுப்பியது. "அற்புத நாக்' என்னும் சக்திவாய்ந்த நாகத்தின் உதவியுடன் நந்திவரதன் அங்குவந்தான்.அவன் வசிஷ்டரிடம், "சப்ரிஷிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு ஆசிரமத்தை இங்கு கட்டுங்கள். பலன்தரக் கூடிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் இந்த இடத்தில் நட்டு வளரும்படி செய்யுங்கள்'' என்றான்.

அப்போது நந்திவரதனை அங்கு கொண்டு வந்த பாம்பு தன் பெயரை அந்த இடத்திற்கு வைக்கும்படி கூறியது. அதன்படி "அற்புத நாக்' என்று அந்த இடத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் சுருங்கி "அபு' என்றானது. நந்திவரதன் உடல் பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டேயிருக்க, அவனுடைய மூக்கு பூமிக்கு மேலே இருந்திருக்கிறது. அதுதான் இப்போதிருக்கும் மவுன்ட் அபு என்னும் மலை. வசிஷ்டர் சிவனை வேண்டிக்கொள்ள, சிவபெருமான் தன் வலக்காலின் கட்டை விரலால் நந்திவரதன் கீழே செல்வதைத் தடுத்து நிறுத்தினார். அவ்வாறு அவர் தடுத்து நிறுத்திய இடம்தான் இப்போதிருக்கும் "அச்சல்'. அங்கு பின்னர் அச்சல்கர் கோட்டை கட்டப்பட்டது. "கர்' என்றால் கோட்டை.சிவனின் கட்டை விரலை வழிபட்டதால், அங்கு குடிகொண்டிருக்கும் சிவன், அச்சல்கர் மகாதேவ் என்று பெயர்பெற்றார்.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் 1,892 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அஹமதாபாத்தை அடைய வேண்டும். அங்கிருந்து 180 கிலோமீட்டர் தூரத்தில் அபுரோடு உள்ளது. அங்கிருந்து வாடகைக் காரிலோ பேருந்திலோ 35 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடையலாம். தினமும் ரயில் வசதி இருக்கிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் அச்சலேஸ்வர் மகாதேவரின் அருளைப் பெறுவதற்காக இந்த ஆலயத்தைத் தேடிவருகின்றனர். நீங்களும் அவர்களுள் ஒருவராக இருக்கலாமே!

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.