Skip to main content

திருமணத்தடை நீங்க, எதிரிகள் விலக உதவும் பைரவர் வழிபாடு; எப்போது, எப்படி வழிபட வேண்டும்? - ஜோதிடர் விளக்கம்

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

 Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், பைரவர் வழிபாடு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

”அஷ்டதிக் பாலகர்கள் என்று சொல்லக்கூடிய இந்திரன், அக்னி, எமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு பேரும் ஒருவரைக் கைவிட்டுவிட்டாலும் காக்கக்கூடிய கடவுள் பைரவர். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. ஒவ்வொரு திசைக்கும் எட்டு பைரவர்களாக 64 பைரவர்கள் காவலிருக்கிறார்கள். பைரவ வழிபாடு செய்யும்போது தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீர்ந்துவிடும். சில நேரங்களில் செல்வாக்காலும் செல்வத்தாலும் நம்முடைய எதிரிகள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அடக்கவே முடியாத அந்த எதிரிகளை அடக்க பைரவ வழிபாடு உதவும். 

 

சிவாலயங்களில் ஈசான மூலைகளில் தெற்கு நோக்கி காவலிருப்பவர் பைரவர். வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் பயம் கொள்ளக்கூடியவர்கள் கால பைரவரை வணங்கலாம். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமிதான் பைரவரின் ஜென்மாஷ்டமி. அந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் பஞ்சதீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் இதுவரை முடிவுக்கு வராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 

 

பொதுவாக சிவன் கோவிலில் இரவு பூஜை முடிந்த பின் சந்நதியை பூட்டி அதன் சாவியை காலபைரவரின் காலடியில் வைத்துவிட்டுச் செல்வார்கள். காலபைரவரை வணங்கினால் நம்முடைய உடமைகள் களவு போகாது என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம். அதேபோல பைரவரை வணங்கினால் செய்வினைப் பிரச்சனைகள் தீரும். குடுகுடுப்பைக்காரர்கள்கூட நாய்களை அடக்கிய பிறகே தங்களது மந்திரத்தை பிரயோகம் செய்ய முடியும். பைரவரின் வாகனமான நாய்கள் இருக்கும்வரை மந்திரம் வேலை செய்யாது. 

 

தேய்பிறை அஷ்டமியில் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசும் நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும். ஆறு மாதங்கள் தேய்பிறை அஷ்டமியில் சிவப்பு நிற அரளிப்பூவால் பைரவரை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சனிப்பிரதோச நாட்களில் பைரவரை வழிபட்டால் வழக்குகளும் சண்டை சச்சரவுகளும் நீங்கி எல்லா வழக்கிலும் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் பைரவரை வணங்கி காலபைரவ அஷ்டகம் படித்து வந்தால் எத்துணை பெரிய எதிரிகளும் அழிந்துவிடுவார்கள். 

 

பைரவரை தாமரை இலைகளாலும் வில்வ இலைகளாலும் பூஜை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை நெய்தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடைகள் விலகும். பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவிடுவதன் மூலம் பைரவரின் பரிபூரண அன்பைப் பெறலாம். அனைவரும் பைரவரை வணங்கி உங்களது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்”. 

 

 

Next Story

செவ்வாய் தோஷத்திற்கு இவ்வளவு ஈஸியான பரிகாரங்களா? - ஜோதிடர் கூறும் எளிய பரிகாரங்கள் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செவ்வாய் தோஷம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“திருமணத் தடைகளை ஏற்படுத்தும் நாகதோஷம் போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடியது செவ்வாய் தோஷம். ஒரு ஜாதகருக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் வரும். இது லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, சுக்ரனுக்கோ அமைப்பாக அமைந்தாலும் செவ்வாய் தோஷம் வரும். பல விதமான விதிவிலக்குகளும் செவ்வாய் தோஷத்திற்கு உண்டு. 

 

குரு பார்வை, கிரக யுத்தம் உட்பட பல விஷயங்களை வைத்து ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடர் மட்டுமே சொல்லமுடியும். பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். செவ்வாய்க்கு காரணமான தெய்வம் முருகன். முருகப்பெருமானின் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதும், தென்னிந்தியாவிற்கே ஆதிபத்ய கிரகமாக செவ்வாய் இருப்பதுமே அதற்கு காரணம். 

 

ஆனாலும், திருமணத்திற்கு முன்னால் சில பரிகாரங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரையை தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படும். செவ்வாய் கிழமையின் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரம் விஷேசமானது என்பதால் அந்த நேரத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படித்தால் மிகவும் நல்லது. அதன் மூலம் திருமணத் தடையும் நீங்கும். 

 

முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்றாலும் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்கும். செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று பரிகார பூஜைகள் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும். சிவப்பு நிற சேலை, மஞ்சள் கயிறை சுமங்கலி பெண்களுக்குத் தானமாக செய்தால் செவ்வாய் தோஷத்தின் கடுமை குறையும். நான் மேலே கூறிய தோஷங்களையெல்லாம் செய்ய முடியாதவர்கள் வன்னி மரத்தை வணங்கலாம். 

 

கணவன் மனைவிக்குள் சண்டை மற்றும் குழந்தை பாக்கியத்தில் குறைபாட்டையும் செவ்வாய் தோஷம் ஏற்படுத்தக்கூடியது. எனவே செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரத்தை செய்துவிட்டு திருமணம் செய்யுங்கள். எந்த சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என்றாலும் செவ்வாயின் பரிபூரண அனுகிரகம் தேவை. எனவே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் முருகனை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்”. 

 

 

Next Story

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு...” - மூச்சுக்காற்று மூலம் வசியம் செய்யும் ரகசியத்தை விளக்கும் ஜோதிடர் 

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், மூச்சுக்காற்று குறித்தும் பிராணாயாமம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“இன்றைக்கு எல்லோருக்கும் நிறைய பிரச்சனைகளும் நிறைவேறாத ஆசைகளும் உள்ளன. நம்முடைய மூச்சுக்காற்றைப் பயன்படுத்தியே அதை எப்படி சரி செய்துகொள்ளலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

 

மூச்சுக்காற்றுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பயமாக இருக்கும்போது மூச்சுக்காற்று தடைபடுகிறது. மனம் சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனமடையும். உடலையும் மனதையும் இணைக்கக்கூடியது மூச்சுக்காற்று. வலது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சூரியகலை. இடது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சந்திர கலை. சித்தர்களின் இலக்கியத்தில் மூச்சுக்காற்று கால் என்று  பெருமைப்படுத்தப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜர் வேறு காலால் ஆடுவதையும் மதுரையில் கால் மாற்றி ஆடுவதையும் பார்க்க முடியும். ஆண் தன்மையைக் குறிக்கக்கூடியது சிதம்பர நடனம். பெண் தன்மையைக் குறிக்கக்கூடையது மதுரை.

 

சூரியன் ஆண்; சந்திரன் பெண். வலது கால் மீது இடதுகாலை போட்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் அதிகமாகும். இடது கால் மீது வலது காலை போட்டுக்கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் அதிகமாகும். வலது கால் மீது இடது கால் போட்டு அமர்பவர்கள் ஆதிக்க சக்தியாக இருப்பார்கள். மூச்சுக்காற்று ஒருநாளைக்கு 21,600 முறை நிகழ்கிறது. 10,800 உள்வாங்குதலும் 10,800 வெளியிடலும் இதில் அடங்கும். இந்த 21,600 மூச்சுக்காற்றுகளை விளக்குவதற்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில் 21,600 தங்க ஓடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மூச்சுக்காற்றியின் அவசியத்தை பல இடங்களில் சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை யுதைக்குக் குறியதுவாமே” என்பது திருமூலரின் வாக்கு. காலை 4 மணிக்கு நம்முடைய மூச்சு எந்தப் பக்கமாக வெளியேறுகிறது என்பதை வைத்து அன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை சொல்லிவிடமுடியும். இதைத்தான் சரஜோதிடம் என்பார்கள். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய தனிப்பட்ட ஆற்றல் பிரபஞ்ச சக்தியாக விரிவடையும். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய உடல் புல்லாங்குழல்; இல்லாவிட்டால் நம்முடைய உடல் அடுப்பு ஊதும் குழல். 

 

மூச்சு விடுதலில் மூன்று நிலைகள் உள்ளன. மூச்சை உள்ளே இழுப்பது(பூரகம்), இழுத்த மூச்சை உள்ளே தக்க வைப்பது(கும்பகம்), தக்க வைத்த மூச்சை வெளியே விடுவது(ரேசகம்). இதைத்தான் பிராணாயாமம் என்கிறார்கள். இதை மாறிமாறி நாம் செய்யும்போது மூச்சு நாடி சுத்தமாகிறது. இடது நாசி வழியாக நான்கு வினாடிகள் சுவாசத்தை உள்ளிழுத்து, அதை 16 வினாடிகள் தக்க வைத்து, அதை வலது நாசி வழியாக 8 வினாடிகள் வெளியிட்டால் அது ஒரு சுழற்சி எனப்படும். இதுபோல 21 சுழற்சி செய்தால் நம்முடைய உடலும் மனமும் தூய்மையடையும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். வியாழக்கிழமை அன்று வளர்பிறையாக இருந்தால் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். தேய்பிறையாக இருந்தால் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். 

 

தொடர்ந்து இதை செய்யும்போது நம்முடைய ஆசையும், பிரார்த்தனையும் காற்றில் கலந்து உரிய இடத்தைச் சென்றடையும். அப்படியென்றால் காற்றின் மூலம் ஒருவரை கட்டுப்படுத்த முடியுமா, வசியம் செய்ய முடியுமா என்றால் முடியும். காரணம், அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே காற்றின் மூலமாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளார்கள். ஒருவர் நமக்கு அடிபணிய வேண்டும் என்று நினைத்து இதை நாம் செய்தால் நிச்சயம் அவர் நமக்கு அடிபணிவார். வயிற்றில் காற்றை அடைத்து வைத்திருக்கும் கும்பக நிலையில் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் 10,800 ஜெபம் செய்வதற்கு சமமாகும். சித்தர்களின் இந்த சூட்சம ரகசியத்தை பின்பற்றி அனைவரும் பலன்பெறுங்கள்”.