Skip to main content

”இந்தப் பிரச்சனையெல்லாம் இருந்தால் இந்தப் பரிகாரங்களை செய்யுங்க” - ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், உடனடி தீர்வு தரும் பரிகாரங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

நம்முடைய பிரார்த்தனை மூலம் கேட்ட வரம் கிடைக்கச் செய்யும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் வெகுகாலமாக பரிகாரம் செய்ய யாரும் தயாராக இல்லை. நம்முடைய பிரார்த்தனை வேகமாக நிறைவேற வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள். 

 

நிறைய பேருக்கு திருமணத்தடை இருக்கிறது. கைகூடி வரும் திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால் கடைசி நேரத்தில் கை நழுவிவிடும். திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் உள்ள கோவிலில் வாழை மரம் தலைவிருட்சமாக இருக்கிறது. அந்த வாழை மரத்திற்கு தாலி கட்டிய பிறகு அதனை வெட்டிவிடக்கூடிய சடங்கு நடைபெறும். இதை வாழைமர பூஜை என்பார்கள். இந்தச் சடங்கைச் செய்தால் திருமணத் தடை நீங்கும்.

 

சிலருக்கு ஜாதகத்தில் இருதாரமண அமைப்பு இருக்கும். அதாவது முதல் மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது. இந்த அமைப்பு உள்ளவர்களும் இந்த வாழைமர பூஜை செய்தால் அவர்களது திருமண வாழ்க்கை எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சிறக்கும். 

 

தீர்க்க முடியாத, மீள முடியாத பிரச்சனைகள் தீரவும், எதிரிகளை வெற்றி கொள்ளவும் ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் செய்யலாம். எப்பேர்பட்ட வலிமையான எதிரியையும் இந்த மிளகாய் யாகம் மூலம் வெற்றி கொள்ளலாம். பௌர்ணமி அல்லது செவ்வாய் கிழமைகளில் ப்ரத்யங்கிரா தேவியை வணங்கினால் இழந்த செல்வம் மீண்டுவரும். 

 

சிலர் நோய் வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையால் தீர்க்கவே முடியாத நிலையில் இருப்பார்கள். அவர்கள் உறுப்பு காணிக்கை செலுத்துதல் என்ற வேண்டுதலை வேண்டிக்கொண்டால் கை, கால் மற்றும் பிற உறுப்புகளில் உள்ள நோய்கள் நீங்கிவிடும். வலி நீங்கிய பிறகு வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்புகளை வாங்கி கோவில் உண்டியலில் செலுத்தலாம். இந்தப் பிரார்த்தனை சமயபுரம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் அதிக அளவில் நடக்கிறது. 

 

எவ்வளவோ முயற்சித்தும் போட்டி தேர்வுகளில் தோல்வி ஏற்படுகிறது என்றால் சிறிய குதிரை சிலை வாங்கி அய்யனார் கோவிலில் சாத்தலாம். குதிரை சிலை வாங்கி அய்யனாருக்கு சாத்துவது காரியத் தடையை நீக்கி வெற்றியை ஏற்படுத்தும். 

 

பணம் வாங்கிக்கொண்டு நம்மை யாராவது ஏமாற்றினால் அந்தக் காசு திரும்பக் கிடைக்கவும் அவர்களுக்கு ஒரு தண்டனையை கொடுக்கவும் ஒரு பரிகாரம் இருக்கிறது. சிவகங்கைக்கு அருகே கொல்லங்குடி என்ற ஊரில் வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் சென்று காசு வெட்டினால் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும். இங்கு வந்து காசு வெட்டினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கட்டாயமாகத் தீர்ப்பு கிடைக்கும். 

 

பிராது கட்டுதல் என்று ஒரு பழக்கம் உள்ளது. ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதைப்போல கடவுளிடம் விண்ணப்பிக்கும் முறைதான் இந்தப் பிராது கட்டும் முறை. விருத்தாச்சலம் அருகே கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளது. நம்முடைய பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி முனியப்பர் சந்நதியில் உள்ள வேலில் கட்டினால் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறும். நான் மேலே சொன்ன பிரார்த்தனைகள் அனைத்தும் உடனடி பலன் தரக்கூடியவை. இந்தப் பரிகாரங்களைச் செய்து எல்லோரும் நலம் பெறுங்கள்.  

 

 

Next Story

செவ்வாய் தோஷத்திற்கு இவ்வளவு ஈஸியான பரிகாரங்களா? - ஜோதிடர் கூறும் எளிய பரிகாரங்கள் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செவ்வாய் தோஷம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“திருமணத் தடைகளை ஏற்படுத்தும் நாகதோஷம் போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடியது செவ்வாய் தோஷம். ஒரு ஜாதகருக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் வரும். இது லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, சுக்ரனுக்கோ அமைப்பாக அமைந்தாலும் செவ்வாய் தோஷம் வரும். பல விதமான விதிவிலக்குகளும் செவ்வாய் தோஷத்திற்கு உண்டு. 

 

குரு பார்வை, கிரக யுத்தம் உட்பட பல விஷயங்களை வைத்து ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடர் மட்டுமே சொல்லமுடியும். பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். செவ்வாய்க்கு காரணமான தெய்வம் முருகன். முருகப்பெருமானின் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதும், தென்னிந்தியாவிற்கே ஆதிபத்ய கிரகமாக செவ்வாய் இருப்பதுமே அதற்கு காரணம். 

 

ஆனாலும், திருமணத்திற்கு முன்னால் சில பரிகாரங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரையை தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படும். செவ்வாய் கிழமையின் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரம் விஷேசமானது என்பதால் அந்த நேரத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படித்தால் மிகவும் நல்லது. அதன் மூலம் திருமணத் தடையும் நீங்கும். 

 

முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்றாலும் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்கும். செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று பரிகார பூஜைகள் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும். சிவப்பு நிற சேலை, மஞ்சள் கயிறை சுமங்கலி பெண்களுக்குத் தானமாக செய்தால் செவ்வாய் தோஷத்தின் கடுமை குறையும். நான் மேலே கூறிய தோஷங்களையெல்லாம் செய்ய முடியாதவர்கள் வன்னி மரத்தை வணங்கலாம். 

 

கணவன் மனைவிக்குள் சண்டை மற்றும் குழந்தை பாக்கியத்தில் குறைபாட்டையும் செவ்வாய் தோஷம் ஏற்படுத்தக்கூடியது. எனவே செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரத்தை செய்துவிட்டு திருமணம் செய்யுங்கள். எந்த சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என்றாலும் செவ்வாயின் பரிபூரண அனுகிரகம் தேவை. எனவே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் முருகனை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்”. 

 

 

Next Story

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு...” - மூச்சுக்காற்று மூலம் வசியம் செய்யும் ரகசியத்தை விளக்கும் ஜோதிடர் 

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், மூச்சுக்காற்று குறித்தும் பிராணாயாமம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“இன்றைக்கு எல்லோருக்கும் நிறைய பிரச்சனைகளும் நிறைவேறாத ஆசைகளும் உள்ளன. நம்முடைய மூச்சுக்காற்றைப் பயன்படுத்தியே அதை எப்படி சரி செய்துகொள்ளலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

 

மூச்சுக்காற்றுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பயமாக இருக்கும்போது மூச்சுக்காற்று தடைபடுகிறது. மனம் சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனமடையும். உடலையும் மனதையும் இணைக்கக்கூடியது மூச்சுக்காற்று. வலது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சூரியகலை. இடது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சந்திர கலை. சித்தர்களின் இலக்கியத்தில் மூச்சுக்காற்று கால் என்று  பெருமைப்படுத்தப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜர் வேறு காலால் ஆடுவதையும் மதுரையில் கால் மாற்றி ஆடுவதையும் பார்க்க முடியும். ஆண் தன்மையைக் குறிக்கக்கூடியது சிதம்பர நடனம். பெண் தன்மையைக் குறிக்கக்கூடையது மதுரை.

 

சூரியன் ஆண்; சந்திரன் பெண். வலது கால் மீது இடதுகாலை போட்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் அதிகமாகும். இடது கால் மீது வலது காலை போட்டுக்கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் அதிகமாகும். வலது கால் மீது இடது கால் போட்டு அமர்பவர்கள் ஆதிக்க சக்தியாக இருப்பார்கள். மூச்சுக்காற்று ஒருநாளைக்கு 21,600 முறை நிகழ்கிறது. 10,800 உள்வாங்குதலும் 10,800 வெளியிடலும் இதில் அடங்கும். இந்த 21,600 மூச்சுக்காற்றுகளை விளக்குவதற்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில் 21,600 தங்க ஓடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மூச்சுக்காற்றியின் அவசியத்தை பல இடங்களில் சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை யுதைக்குக் குறியதுவாமே” என்பது திருமூலரின் வாக்கு. காலை 4 மணிக்கு நம்முடைய மூச்சு எந்தப் பக்கமாக வெளியேறுகிறது என்பதை வைத்து அன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை சொல்லிவிடமுடியும். இதைத்தான் சரஜோதிடம் என்பார்கள். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய தனிப்பட்ட ஆற்றல் பிரபஞ்ச சக்தியாக விரிவடையும். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய உடல் புல்லாங்குழல்; இல்லாவிட்டால் நம்முடைய உடல் அடுப்பு ஊதும் குழல். 

 

மூச்சு விடுதலில் மூன்று நிலைகள் உள்ளன. மூச்சை உள்ளே இழுப்பது(பூரகம்), இழுத்த மூச்சை உள்ளே தக்க வைப்பது(கும்பகம்), தக்க வைத்த மூச்சை வெளியே விடுவது(ரேசகம்). இதைத்தான் பிராணாயாமம் என்கிறார்கள். இதை மாறிமாறி நாம் செய்யும்போது மூச்சு நாடி சுத்தமாகிறது. இடது நாசி வழியாக நான்கு வினாடிகள் சுவாசத்தை உள்ளிழுத்து, அதை 16 வினாடிகள் தக்க வைத்து, அதை வலது நாசி வழியாக 8 வினாடிகள் வெளியிட்டால் அது ஒரு சுழற்சி எனப்படும். இதுபோல 21 சுழற்சி செய்தால் நம்முடைய உடலும் மனமும் தூய்மையடையும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். வியாழக்கிழமை அன்று வளர்பிறையாக இருந்தால் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். தேய்பிறையாக இருந்தால் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். 

 

தொடர்ந்து இதை செய்யும்போது நம்முடைய ஆசையும், பிரார்த்தனையும் காற்றில் கலந்து உரிய இடத்தைச் சென்றடையும். அப்படியென்றால் காற்றின் மூலம் ஒருவரை கட்டுப்படுத்த முடியுமா, வசியம் செய்ய முடியுமா என்றால் முடியும். காரணம், அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே காற்றின் மூலமாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளார்கள். ஒருவர் நமக்கு அடிபணிய வேண்டும் என்று நினைத்து இதை நாம் செய்தால் நிச்சயம் அவர் நமக்கு அடிபணிவார். வயிற்றில் காற்றை அடைத்து வைத்திருக்கும் கும்பக நிலையில் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் 10,800 ஜெபம் செய்வதற்கு சமமாகும். சித்தர்களின் இந்த சூட்சம ரகசியத்தை பின்பற்றி அனைவரும் பலன்பெறுங்கள்”.