இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் 390 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான 'அமாக்' நிறுவனம் வாயிலாக அறிவித்தது.

இந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கூறிய இலங்கை அதிபர் சிறிசேனா, இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில் அவர் பதவி விலக கூறிய பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெமசிரி ஃபெர்னாண்டோ அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், "இலங்கை தொடர் குண்டுவெடிப்பின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் பற்றி விசாரணை மேற்கொள்வோம். இந்த விஷயத்தை சரி செய்வோம்" என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் பதிவு விலக கூறிய நிலையில் பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெமசிரி ஃபெர்னாண்டோவின் இந்த அறிக்கை இலங்கை அரசின் ஸ்திரத்தன்மை குறித்த சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.