Skip to main content

“அது நக்கீரனின் வீர விளையாட்டு..” - மறைந்த எழுத்தாளர் ‘சிங்கப்பூர்’ ராமன் நினைவலை

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

Singapore Tamil Writer Late A.P.Raman about Nakkheeran Editor

 

சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஏ.பி. ராமன்(90) நேற்று இரவு காலமானார்.

 

1932ல் தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்த ராமன், 1960களில் சிங்கப்பூரில் குடியேறினார். அங்கு உள்ள ஆர்.டி.எஸ். ஒலிபரப்புச் சேவையில் அப்போது அவர் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். மேலும், இவர் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதிய ராமன், புதுயுகம் வார இதழ், கலைமலர் மாத இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் நேற்று  இரவு பீஷானில் உள்ள அவருடைய இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரது இறப்புக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இவருடன் நெருங்கி பழகிய நக்கீரன் ஆசிரிய தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார். 

 

நக்கீரன் ஆசிரியர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஏ.பி.ராமனைச் சந்தித்திருந்தார். இதுகுறித்து எழுத்தாளர் ராமன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்போது பதிவிட்டிருந்தார். அவர் பதிவிலிருந்து;
 


“பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சொந்த வேலை காரணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். முக்கியமானவர்களை சந்தித்து சில மணி நேரங்கள் அளவளாவியபோது, பல சொந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். நடந்த சில பழைய கதைகளை சுவை குறையாமல் சொன்னார். பப்ளிசிட்டி இல்லாமல் கூட்டிய இந்நிகழ்விற்கு இத்தனை கூட்டமா? 

 

60 வயது தெரியாவண்ணம் இளமைப் பூச்சுடன் படர்ந்து வளர்ந்திருக்கும் அவருடைய மீசைக் கதையில் அத்தனை கறுகறுப்பு!. மாப்பிள்ளையை பார்த்த பெண்களில் மீசையைப் பார்த்து மிரண்டு போனவர்கள்  நூற்றுக் கணக்கிலாம். இறுதியில் இணங்கித் தலை நீட்டிய மனைவியாருக்கு இரு மகள்கள். ஆனாலும் வாழ்க்கை முழுவதும்  சடுகுடு விளையாட்டு சர்வ சாதாரணம் ராஜகோபால் என்கிற கோபாலுக்கு! அப்பா என்னென்னவெல்லாமோ படிக்க வைத்தும், இந்த அருப்புக்கோட்டையாருக்கு கொடுத்து வைத்தது பத்திரிக்கைத் தொழில்தான். 

 

ஷ்யாமின் ‘தராசு’ இதழைப் பிடித்துப் பார்த்தார் – முள் சரியாக நிற்கவில்லை. நக்கீரனை சொந்தத்தில் உருவாக்கினார். இன்று அதற்கென ஒரு கொள்கையை நிர்ணயித்துக் கொண்டு, அந்த எல்லையில் நெற்றிக் கண்ணை திறந்து கொண்டிருப்பவர். ஆனாலும் அந்தப் பாதையில் அவர் கண்ட கல்லும், முள்ளும் அவருடைய காலுக்கு மெத்தையாகவில்லை. வாழ்க்கை முழுவதும் இம்சை அனுபவங்கள், சட்டப் பிடியின் சிக்கல்கள், தலையும், மீசையும் தெரியாமல் தப்பி வாழ வேண்டிய அவசியங்கள், அன்றாட அரசியல் தொந்திரவுகள் என தன் அன்றாட நிகழ்வுகளை  அடுக்கிக் கொண்டே போனார் நக்கீரனார்!

 

சந்தன வீரப்பனின் காடேகும் படலம், கம்ப ராமாயணத்தில் ஆரண்ய காண்டம்! 12 ஆண்டு காலம் காட்டில் ஓடியாடி விளையாடிக் கொண்டு, கைக்குக் கிடைத்த சந்தன மரங்களை எல்லாம் வளைத்துப் பிடித்து வியாபாரம் செய்து  கொண்டிருந்த வீரப்பனோடு நட்புறவாடி, உயிரோடு திரும்பியது, என்ன தான் பலன் கிடைத்தாலும், அது  நக்கீரன் கோபாலின் வீர விளையாட்டாகும்! திகில் ஊட்டும் காட்டில், மாநில அதிகாரிகளின் தலைகளை அவ்வப்போது கொய்து போட்டுக் கொண்டிருந்த வீரப்பனோடு கலந்து பழகி, சந்தன மணத்தோடு திரும்பி வந்து வாழ்பவர் கோபால் என்பதை வேண்டாதவர்களும் ஏற்க வேண்டும்.

 

கசப்பையும், இனிப்பையும் நிறைய ருசித்து மகிழ்ந்தவர் இந்த சின்ன வயது பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால். தன்னையும் தற்காத்துக் கொண்டு, தொழிலையும் காப்பாற்றியபடி அரசியல் கலவாத கலந்துரையாடலுடன் சிங்கை வந்து சென்று திரும்பிய நக்கீரன் கோபாலை வாழ்த்துகிறோம். நம் சமூக ஆர்வலர் அருமைச் சந்திரனின் கச்சிதமான ஏற்பாட்டைப் பாராட்டுவோம்” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிங்கப்பூர் போல் தமிழகத்தின் துறைமுகங்களை மாற்றும் முயற்சி; சிங்கப்பூரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நாட்டுக்கு சென்று துறைமுகங்கள் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு.

 

சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சிங்கப்பூர் வருகை தந்து இங்குள்ள துறைமுகங்கள் குறித்து பார்க்கவேண்டும் என அழைப்பு விடுத்தது. அதன் அழைப்பை ஏற்று செப்டம்பர் 27ஆம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் சிங்கப்பூர் சென்றனர்.

 

சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் பிரபாகர் அமைச்சரை வரவேற்றார். அதிகாரிகளுடன் சிங்கப்பூர் துறைமுகத்தின் சரக்கு பெட்டக முனையத்தை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அங்கிருந்த துறைமுக பிரதிநிதி அனைத்தும் சுற்றிக்காண்பித்து அதுகுறித்த தகவல்களை அமைச்சரிடம் தெரிவித்தார். அதன்படி, பன்னாட்டு துறைமுக சரக்கு பெட்டக முனையங்களில் சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக முனையம் துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

2023 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் இந்த துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்கு பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இறங்குதல் வசதி மற்றும் துறைமுக வலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்கு பெட்டங்களை கையாளும் திறன் கொண்டது என்று  அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

 

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையே அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாட்டின் கடற்கரையில் திறனை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை எளிதாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் துறைமுக பிரநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

அமைச்சர் சிங்கப்பூர் சென்றதும் திமுக அயலக அணியின் சிங்கப்பூர் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

 

 

Next Story

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு நிதி வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்கள்! - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Singaporean businessman who funded Tamilnadu government school

 

தமிழக இளைஞர்கள் பல்வேறு பட்டப் படிப்புகளைப் படித்த பிறகு வேலைக்காக வெளிநாடு சென்று சம்பாதித்து வருகின்றனர். இதில் சிங்கப்பூரில் அதிகமான தமிழக இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். படிப்பை முடித்ததும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் திருமணங்களுக்காகச் சொந்த ஊர் வரும்போது பல நிறுவனங்கள் வாழ்த்தி கல்யாணப் பரிசுகளும் வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.

 

சமீப காலமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞர்களின் நிறுவன முதலாளிகள், மேலாளர்கள் பிளைட்டில் பறந்து வந்து நேரில் மணமக்களை வாழ்த்திச் செல்கின்றனர். கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூர் நிறுவன முதலாளி, மணமக்களை வாழ்த்தி கல்யாணப் பரிசு வழங்கியதுடன் அப்பகுதி அரசுப் பள்ளிகளுக்கு கணினி பொருட்கள் வாங்க நிதி வழங்கிச் சென்றார்.

 

அதேபோல ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருக்காக்குறிச்சி செல்வம் சகோதரர்கள் திருமணத்திற்கு, சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கால்லின், நிறுவன திட்ட இயக்குநர் ஹம்மிங்க், திட்ட மேலாளர் டிம் ஆகியோர் நேரில் வந்தனர். அவர்களைச் செண்டை மேளம் முழங்க பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து மரியாதை செய்தனர். தமிழ்நாடு கலாச்சாரத்தைப் பார்த்து வியந்த சிங்கப்பூர்க்காரர்கள் ‘ஐ லவ் இந்தியா’ என்று கூறி மகிழ்ந்தனர்.

 

Singaporean businessman who funded Tamilnadu government school

 

அடுத்த நாள் தனது நிறுவன ஊழியர் செல்வம் படித்த கருக்காக்குறிச்சி அரசுப் பள்ளிக்கு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த நிதி வழங்க வருவதை அறிந்த கிராம மக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் உடனேயே ரூ. 1 லட்சம் நிதி வழங்கியதோடு மேலும் நிதி வழங்கத் தயாராக உள்ளோம் என்றனர்.

 

இதனைப் பார்த்த கிராம மக்கள், ‘எங்கிருந்தோ வந்து எங்க குழந்தைகளின் கல்விக்காக; எங்க ஊரு அரசுப் பள்ளிக் கூடத்தை வளமாக்க நிதி தந்த தொழிலதிபர்களை பாராட்டுகிறோம். இதுபோன்றவர்களால் கிராமத்து ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தொழில்நுட்ப வளர்ச்சியடைவதை பெருமையாகப் பார்க்கிறோம்’ என்கின்றனர்.