சவுதி அரேபியாவில் பாசக்கார தந்தை ஒருவர், தனது மகனின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக தவறுதலாக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு விமானங்களை வாங்கிய சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது.

சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி முதலீட்டாளராக உள்ள ஒருவர், தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக ஏர்பஸ் விமானத்தின் மாடல் ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளார். சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் சொல்லாமல் அவரே ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் சற்று வீக்கான அவரிடம், விமான நிறுவன அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். சரியாக ஆங்கிலம் பேச வராத இவர், ஏதோ பேசி சமாளித்து விமானத்தை ஆர்டர் செய்துள்ளார். அவர்கள் விமானத்தின் விலை இந்திய மதிப்பில் 2600 கோடி ரூபாய் என கூறியுள்ளனர். இவ்வளவு செலவு செய்தால் கண்டிப்பாக அருமையான மாடலாக இருக்கும் என நினைத்து பணத்தை அனுப்பியுள்ளார்.
2 மாதங்கள் கழித்து தனது மகன் பிறந்தநாள் வரும் நேரத்தில் விமான நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய விமான நிலைய அதிகாரிகள், "நீங்கள் கேட்ட 2 விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. எப்போது வாங்கிக்கொள்கிறீர்கள்” என்று கேட்டுள்ளனர். அவர்கள் விளையாடுகின்றனர் என நினைத்து முதலில் பேசிய அவருக்கு, சற்றுநேரம் கழித்துதான் தனது தவறு புரிந்துள்ளது.
பின்னர் அவர்களிடம் அந்த இரண்டு விமானங்களையும் வாங்கியுள்ளார். அதில் ஒன்றை தனது மகனுக்கும் மற்றொன்றை தனது உறவினர்களுக்கும் பரிசாக அவர் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சுவாரசியமாக பார்க்கப்படுகிறது. இது பற்றி விமானத்தை ஆர்டர் செய்த அந்த நபர் பேசுகையில், "விமான நிறுவன பணியாளர்கள் என்னிடம் விமானத்தின் உள்புற அமைப்பு மற்றும் வெளிப்புற அமைப்பு குறித்து பல கேள்விகளை கேட்டனர். எனக்கு ஆங்கிலம் புரியாத காரணத்தால் ஏதோ ஒருவகையில் சமாளித்து விட்டேன்.
இறுதியில் பணத்தை செலுத்தக் கூறினர். விமானத்தின் மாடலை துல்லியமாக செய்து கொடுக்கப்போகிறார்கள் போல, கட்டணம் அதிகமாக இருந்தாலும், அந்த தொகைக்கு ஏற்றார் போல செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். அனால் போன் செய்த போது கேட்ட விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. எப்போது வாங்கிக்கொள்கிறீர்கள் என கேட்டபோது, நான் அதை நகைச்சுவை என்று நினைத்தேன். பின்பு தான் நான் செய்த தவறு புரிந்தது. தற்போது ஒரு விமானத்தை எனது மகனுக்கும், மற்றொரு விமானத்தை எனது உறவினர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்துவிட்டேன்" என தெரிவித்தார்.