Skip to main content

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு பொறுப்பேற்க முடியாது"- சவூதி அரேபியா அரசு அறிவிப்பு!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Saudi Arabia cannot be held responsible for rising crude oil prices

 

கச்சா எண்ணெய் திடீர் விலை உயர்வுக்கு பொறுப்பேற்க முடியாது என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. 

 

சவூதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகளின் பல எண்ணெய் கிணறுகள், சேமிப்பு கிடங்குகள் ஏமன் நாட்டில் அமைந்துள்ளன. ஏமன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்களின் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஒபக் எனப்படும் எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த கிடங்குகள் எண்ணெய் கிணறுகள் உள்ள பகுதிகளில் ஏமன் அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே நடைபெறும் சண்டையால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகள் கூடுதலாக பெட்ரோல் பொருட்களை விநியோகிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஏமனில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், திங்களன்று பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்து, ஒரு பேரல் 112 டாலரானது. 

 

அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்களின் விலை 4.33 டாலர் அதிகரிக்கப்பட்டது. பல நாடுகளில் இதே நிலை ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. 

 

ஏமன் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் 2014- ஆம் ஆண்டு கடும் தாக்குதலை நடத்தி, தலைநகர் சானா உள்ளிட்ட வட பகுதிகளைப் பிடித்தனர். அப்போது, சவூதி அரேபியா மற்றும் கூட்டாளி நாடுகள் வான்வெளி தாக்குதலை நடத்தி ஹவுதிக் கிளர்ச்சியாளர்களைப் பின்வாங்கிச் செய்தனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏமன் மீது ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ணூர் எண்ணெய்க் கசிவு விவகாரம்; வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Ennore Oil Spill Case Shocking information released

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில், எண்ணூரில் எண்ணெய்க் கழிவு கலந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனப் பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம். சிபிசிஎல் ஆலையிலிருந்து ஏற்பட்ட கசிவே எண்ணெய்ப் படலம் உருவாகக் காரணம். மழைநீருடன் ஆலையின் எண்ணெய் கலந்ததால் கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது.

மேலும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கசிந்த எண்ணெய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

எண்ணெய்க் கசிவு விவகாரம்; நிவாரணம் வழங்குவது குறித்து மீன்வளத்துறை தகவல்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Oil spill issue Fisheries Dept information on grant of relief

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வழக்கு கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு, சிபிசிஎல் நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீனவர்கள் தரப்பு என 4 தரப்பினரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். மீனவர்கள் தரப்பில் வாதத்தை முன்வைக்கையில், “மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாமல் எண்ணெய்ப் படலம் அகற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஎல் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சுமார் 33 டேங்கர்களில் தலா 220 லிட்டர் என்ற வீதத்தில் 7600 லிட்டர் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணெய்க் கழிவுகள் அகற்றும் பணிக்காக 75 அதிநவீன படகுகள், 4 ஜேசிபிகள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், “மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. மீனவர்களே எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் பணியில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (21.12.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் படர்ந்திருந்த எண்ணெய்க் கழிவுகளால் காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குளம், நெட்டுக்குப்பம், வ.உ.சி. நகர், உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகர் உள்பட 9 கிராமங்களில் உள்ள மீனவர்களின் 787 மீன்பிடிப் படகுகள் சேதமடைந்துள்ளன. எனவே எண்ணெய்க் கசிவால் சேதமடைந்த 787 மீன்பிடிப் படகுகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 787 மீன்பிடிப் படகுகளுக்கு 78.70 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் எண்ணெய்க் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 301 குடும்பங்களுக்குத் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் என 2 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். வாழ்வாதாரம் பாதித்த மீனவர் குடும்பங்களுக்குத் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 6 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதற்காக 5 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் வீடுகள், படகுகளுக்கு நிவாரணம் வழங்க 8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.