Skip to main content

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட பாகிஸ்தான் கடற்படை!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018

படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நடுக்கடலில் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் 9 நாட்களாக தவித்துள்ளனர். இதனிடையே அந்தவழியாக வந்த பாகிஸ்தான் கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகை சோதனையிட்டு, அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கியுள்ளனர். 

 

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படையின் ட்விட்டர் பக்கத்தில், ‘ஏடன் வளைகுடா பகுதியில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த அலிம்கர் படகு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் உதவி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டது. சோதனை நடத்தியதில் செயிண்ட் மேரி என்ற பெயர் கொண்ட அந்தப் படகில் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வந்தது தெரிய வந்துள்ளது’ என பதிவிடப்பட்டிருந்தது.

 

 

ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு, குடிநீர் கிடைக்காமல் இருந்த மீனவர்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் தகுந்த உதவி அளித்து நெகிழச் செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததோடு, அவர்களது படகு எஞ்சினையும் பழுதுபார்த்து அனுப்பியுள்ளனர். கடலில் சிக்கித்தவித்த மீனவர்கள் இந்திய கடற்படை தகவலளித்தும் எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மனிதநேய அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாக கூறியிருக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கு, தமிழக மீனவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

pakistan former prime minister imran khan arrested inciden

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் இன்று (09.05.2023) இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த நிலையில் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இந்த கைது சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அவரை கைது செய்யும் முடிவானது தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பலவேறு இடங்களிலும் அவரது கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் கைது சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

tamilnadu nagapattinam fisherman finger cut incident in bay of bengal sea 

 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி ஐந்து லட்சம் மதிப்புள்ள மீன் மற்றும் வலைகளை பறித்துக் கொண்டதோடு மீனவர்களின் விரல்களை துண்டாடிய கொடூரம் மீனவ மக்களை பதற வைத்துள்ளது.

 

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 6 மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது.

 

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 14 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, சந்துரு, மாதேஷ், சிவபாலன், ஆகாஷ் ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, நான்கு படகுகளில் அதிவேகமாக வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் பாய்ந்து அவர்களை கூர்மையான கத்தியால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இலங்கை கடற்கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதலில் தமிழக மீனவர் முருகனின் இடது கையின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டது. பட்டாக்கத்தி, இரும்பு கம்பிகள், கட்டைகள் கொண்டு படகில் இருந்த மற்ற மீனவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

tamilnadu nagapattinam fisherman finger cut incident in bay of bengal sea 

 

அதனைத் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களின் உதவியோடு, புஷ்பவனம் கடற்கரைக்கு காயம்பட்ட மீனவருடன் கரை வந்து சேர்ந்த சக மீனவர்கள், அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்களின் நிலையைக் கண்டு மருத்துவமனையில் நள்ளிரவில் குவிந்திருந்த மீனவ பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் வெட்டப்பட்ட மீனவர் முருகனை நாகையில் இருந்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ள நாகை மீனவர்கள், பலத்த ஆயுதங்களுடன் கத்தி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், எதிர்த்து பேசினாலே கடுமையாகத் தாக்கினார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளனர். மீனவரின் விரல்களை துண்டாடி இந்திய எல்லையில் அத்துமீறி புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.