Skip to main content

"விழிப்புடன் இருங்கள்..அரசாங்க வாகனங்கள் அருகே செல்லாதீர்கள்" - இந்திய தூதரகத்தின் எச்சரிக்கை!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

indian embassy

 

ஆப்கானிஸ்தானில் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்தநாட்டில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரகம், அந்தநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

 

இதுதொடர்பான தூதரகத்தின் அறிவிப்பில், "பயங்கரவாத குழுக்கள், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ஆப்கானிய பாதுகாப்புப் படைகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெறுகிறது. இதற்கு இந்தியர்கள் விதிவிலக்கல்ல. மேலும், இந்தியர்கள் கூடுதலாகக் கடத்தப்படும் அச்சுறுத்தலையும் சந்திக்கிறார்கள்.

 

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தானுக்கு வருகை தரும், ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் மற்றும் பணிபுரியும் அனைத்து இந்தியக் குடிமக்களும், தங்கள் பணியிடத்திலும், வசிக்கும் இடத்திலும், பணியிடங்களுக்குச் செல்லும்போதும் பாதுகாப்பு குறித்து மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய நாட்டினர் அனைவரும், அனைத்து வகையான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக மக்கள் அதிகம் பயணம் செய்யும் நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவித்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், சாலைகளில் பயணிக்கும்போது, சாத்தியமான தாக்குதல் இலக்கான இராணுவ கான்வாய்கள், அரசாங்க அமைச்சகங்கள்/அலுவலகங்களின் வாகனங்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்கள் ஆகியவற்றிடமிருந்து தூரத்தைப் பராமரிக்க அறிவுறுத்தியுள்ள இந்தியத் தூதரகம், நெரிசலான சந்தைகள், ஷாப்பிங் வளாகங்கள், மண்டிகள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.

 

அதேபோல, "அத்தியாவசியமான பயணங்களின்போதும் அடிக்கடி நேரத்தையும் பாதையையும் மாற்றவேண்டும், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் வழங்கியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கள் மக்கள் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள்” - மாலத்தீவு முன்னாள் அதிபர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former President of Maldives says Our people want to apologize to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார். 

Next Story

IND vs AFG : தொடரை வென்ற இந்திய அணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Indian team won the series

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 வது டி20 போட்டி இன்று (14.01.2024) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ‘டக்’ அவுட் ஆகி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் இந்திய அணி 15.4 ஓவர்களில்  4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம்  6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.