Skip to main content

எலானின் அடுத்த அறிவிப்பு; அதிர்ந்துபோன ட்விட்டர் பயனர்கள்

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

Elon Musk has imposed restrictions on reading posts on Twitter

 

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். 

 

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதோடு, சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி-சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து  காலங்காலமாக இருந்த ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை மாற்றி விட்டு நாய்க்குட்டியின் புகைப்படத்தை ட்விட்டர் லோகோவாக மாற்றினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் மீண்டும் ட்விட்டரின் பழைய லோகோவான குருவியை மாற்றினார் எலான் மஸ்க்.

 

சரிபார்க்கப்பட்ட பயனர் என்பதை குறிக்க வழங்கப்படும் ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரியப் பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையை எலான் மஸ்க் கொண்டு வந்தார்.  இப்படி ட்விட்டரை வாங்கியதுமே சர்ச்சை மற்றும் கேலிகளுக்கு உள்ளாகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் எலான் ஈடுபட்டு வந்தார்.

 

இந்தநிலையில் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று இரவு உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மீண்டும் ட்விட்டர் சீரான சில மணி நேரத்தில் எலான் வெளியிட்ட பதிவில், “சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தேவையற்ற தரவுகளை அகற்றுவதற்காகத் தற்காலிக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அதன்படி சரிபார்க்கப்பட்ட(ப்ளூ டிக்) கணக்குகள் வைத்திருக்கும் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும்.  சரிபார்க்கப்படாத (ப்ளூ டிக் இல்லாதவர்கள்) கணக்குகள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கும் சரிபார்க்கப்படாத பயனர்கள் இனி நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். எலானின் இந்த அறிவிப்புக்கு இணையவாசிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்