Skip to main content

இளநீர் வியாபாரி தென்னை மரத்தில் அமர்ந்தவாறு மரணம்; போலீசார் விசாரணை

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
nn

ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி  கஸ்பாபேட்டை பூளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (60). இவரது மனைவி தயாளு அம்மாள். முத்துசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து மரத்தில் உள்ள இளநீரை அவரே வெட்டி கீழே இறக்கி நஞ்சை ஊத்துக்குளியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி அதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில் இளநீர் பறிப்பதற்காக சென்றார். அதன் பின்பு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மனைவி தொலைபேசியில் அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் அவரது மனைவியும் இளநீர் வியாபாரம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுவார் என இருந்து விட்டார். இரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் தயாளு அம்மாள் உறவினர்களுடன் கணவரை தேடி தென்னந்தோப்புக்கு வந்தார்.  

தோப்பில் அவரது செருப்பும், அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் இருந்தது. அப்போது அங்குள்ள ஒரு தென்னை மரத்தின் உச்சியில் முத்துசாமி அமர்ந்தவாறு இருந்துள்ளார். இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு விரைந்து வந்து மரத்தில் ஏறி முத்துசாமியை மீட்டு கீழே கொண்டு வந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமி எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்