Skip to main content

குடும்ப தகராறில் தலையிட்ட சித்தப்பா; குத்திக் கொன்ற வாலிபர்!

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

young man stabbed to passed away relatives who intervened in the family issue

 

நாமக்கல் அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர், சித்தப்பா என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோகிணி (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தினமும் இரவில் மது போதையில் வரும் அவர், மனைவியிடம் தகராறு செய்து  வந்துள்ளார்.

 

மே 12ம் தேதி இரவும் அவர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த அவருடைய சித்தப்பா சேட்டு (60) சண்டையை விலக்கி விட்டுள்ளார். விஜயகுமார் மது குடித்து வருவதையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, “என் குடும்ப தகராறில் நீ ஏன் தலையிடுகிறாய்?” எனக் கேட்டு, சித்தப்பா என்றும் பாராமல் சேட்டுவை சரமாரியாகக் குத்தினார். கத்திக்குத்தால் பலத்த காயமடைந்த சேட்டு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இந்த களேபரம் குறித்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேட்டுவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

 

இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். குடும்ப தகராறை விலக்கி விட்டு சமாதானம் பேச வந்த சித்தப்பாவை குடி போதையில் வாலிபர் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்