Skip to main content

‘ஊரே தீபாவளி கொண்டாடுது... ஆனா நம்ம குடும்பத்துல நடக்கலயே’- சோகத்தில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

 the young man involved in the theft in the tragedy

 

திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன. அப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவரைப் பல நாட்களாக நோட்டமிட்டு புர்கா அணிந்துவந்து கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மன்னார்குடி காமராஜ் நகரைச் சேர்ந்த ரெங்கராஜ் - கிரிஜா தம்பதி, இரவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர். கயவர்கள் நள்ளிரவில் கொல்லைப்புற கதவை உடைத்து, கிரிஜாவின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்றனர். 

 

அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நன்னிலம் அருகே உள்ள விசலூரைச் சேர்ந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து ஊட்டிக்குச் சுற்றுலா சென்றார்கள். அவர்கள் சுற்றுலா செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டி 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல திருவாரூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த வடிவேல் - கவிதா தம்பதியினர், வேதாரண்யத்திற்கு கவிதாவின் தந்தை இறப்பிற்குச் சென்றனர். அவர்கள் செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த வீட்டிலும் கைவரிசையைக் காட்டினர்.

 

 the young man involved in the theft in the tragedy

 

அதில் 25 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் பணமும் பறிபோனது. கூட்டுறவு நகரைச் சுற்றி மாவட்ட காவல்படை மைதானம், மாவட்ட காவல் தலைமையகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது என்கிற அச்சம்கூட இல்லாமல் கொள்ளையடிக்கிறார்களே என்பதுதான் கூடுதல் ஆச்சர்யம். இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவமாக நன்னிலம் அருகே மணவாளம்பேட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தையே கடத்திச் சென்ற விவகாரம் மாவட்டத்தையே பூதாகரமாக்கியது. பேருந்து ஓட்டுநர் நன்னிலம் ஆய்வாளர் சுகுணாவிடம் புகார் அளித்தார். அடுத்த நிமிடமே விசாரனையில் இறங்கிய ஆய்வாளர், பேருந்து நிறுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த கண்கானிப்பு கேமராக்களையும், அந்த பேருந்து சென்ற வழிதடங்களை ஆய்வு செய்து, அந்தந்த பகுதி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

 

தஞ்சை - திருச்சி சாலையில் திருப்பாய்த்துறையில் அந்தப் பேருந்தை அங்குள்ள போலீசார் வளைத்துப்பிடித்தனர். ஆனாலும் பேருந்தைக் கடத்திய நான்கு இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிறகு திருடர்களைப் பிடிக்க நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையில் தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில் திருப்பூரில் பதுங்கியிருந்தவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பேருந்தைக் கடத்திய நான்கு பேரும் இருபத்தைந்து வயதைத் தாண்டாதவர்கள் என்பதுதான் ஆச்சர்யம். இதுபோன்ற சம்பவங்கள் அடங்குவதற்குள் அடுத்த கொள்ளையாக நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரத்தில் நடந்தது. கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

 

 the young man involved in the theft in the tragedy

 

அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடம் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றிருக்கிறார்.

 

நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்துள்ளார். பொதுமக்களே பாராட்டும் விதமாக அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடதக்கது. 

 

எப்படி திருடினான், என்ன நடந்தது, எப்படி பிடித்தீர்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணாவிடமே கேட்டோம், “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.