
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ளது சிங்கனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மனைவி 50 வயது பரமேஸ்வரி. இவர் கடந்த மாதம் 26ஆம் தேதி திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பரமேஸ்வரியிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டை வாங்கிப் ஏடிஎம் மிஷிஷினில் போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை எனக்கூறி அந்த கார்டை பரமேஸ்வரி இடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
அன்று மாலை பணம் எடுக்காமலேயே பரமேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அப்போதுதான் தன்னிடம் பணம் எடுத்துத் தருவதாக கூறி ஒரு இளைஞர் தன்னிடம் இருந்து வாங்கிய ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து அவன் ஏமாற்றியது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து பரமேஸ்வரி திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தார் அவரது விசாரணையில் அந்த இளைஞர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள கூவனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் 33 வயது மணிகண்டன் என்று தெரிய வந்தது. மேலும் பரமேஸ்வரி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து விட்டு அவரது கார்டை பயன்படுத்தி நூதன முறையில் பணம் எடுத்ததை மணிகண்டன் ஒப்புக் கொண்டுள்ளார்.
போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து திண்டிவனம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணிகண்டனை சிறையில் அடைத்துள்ளனர். படிப்பறிவற்ற அப்பாவி மக்களின் ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொடுத்துவிட்டு அவர்களது கார்டை பயன்படுத்தி பணம் திருடும் கும்பல் அதிகரித்து வருகிறது. போலீசாரும் அவ்வப்போது அப்படிப்பட்ட நபர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனாலும் இந்த நூதன மோசடி தொடர்கிறது.