Skip to main content

திருமணத்தில் காணாமல் போன மாப்பிள்ளை; வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட மணமகள்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

young girl who marries another man because bridegroom missing from wedding

 

சிதம்பரத்தில் தாலி கட்டும் நேரத்திற்கு முன் மணமகன் ஓடிவிட்டதால் மாற்று மணமகனுடன் திருமணம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெயக்குமார். இவர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது. இவருக்கும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்வதற்காக பெரியோர்களால் நிச்சயம் செய்து 1-2-2023  புதன்கிழமை காலை சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்தினமான செவ்வாய்க்கிழமை மாலை மணமக்களின் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்துக்கு வந்திருந்தனர். இதில் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்கள் கலந்துகொண்டு அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர். பின்னர் இரவு 12 மணிவரை இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தை விட்டு மாப்பிள்ளை வெளியேறிவிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர் அவர்களின் உறவினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உற்றார் உறவினர்களும் கவலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து என்ன செய்வது என்று திகைத்து நின்ற மணமகள் மற்றும் அவரின் பெற்றோர் உறவினர்கள் சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிபட்டு கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டார் உறவினர் மகன் இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவத்தால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

 

இதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் முன்னிலையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளைப் பெற்றுக்கொண்டனர். இதேபோல் முன்பு, மணமகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்தபோது அப்போது மணமகள் திருமண மண்டபத்திலிருந்து ஓடிவிட்டார். அதனால் அப்போது திருமணம் நின்றுவிட்டது என உறவினர்கள் மத்தியில் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்