Skip to main content

சத்தியமங்கலம் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Worker lost their life near Sathyamangalam

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார். துரைசாமி மற்றும் பழனியம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு, அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார். எனினும் வயிற்று வலி குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. வயிற்று வலி வரும்போதெல்லாம் துரைசாமி இந்த வலிக்கு பேசாம செத்துவிடலாம் என்று புலம்பி வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

 

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பின்னர் பழனியம்மாளும் அவரது மகன் விஜய்யும் வீட்டுக்குள் தூங்கச் சென்றுவிட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்கச் சென்றார். இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால், கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார். அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார்.

 

பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்த போது துரைசாமி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்