Skip to main content

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண் கொடூரக் கொலை!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Woman passed away after paying interest in Coimbatore

 

வீட்டுக்குள் தனியாக இருந்த உறவுக்காரப் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் அன்னூர் பகுதிக்கு அருகே உள்ள கரைப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். தங்கமணி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர்களுடைய உறவினரான கன்னியப்பன் என்பவருடன் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கன்னியப்பன் தங்கமணியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால், அந்த கடனுக்கு வட்டியும் கட்டாமல் வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த தங்கமணி, எல்லப்பாளையம் பகுதியில் உள்ள கன்னியப்பன் வீட்டிற்கு சென்று, தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு வந்துள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரங்களில் கைகலப்பாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கன்னியப்பன் தங்கமணியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, தாளத்துரை பகுதியில் உள்ள தனது நண்பன் சுதாகர் என்பவருடன் தங்கமணி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

ஆனால், அந்த சமயம் தங்கமணியின் கணவர் சுப்பிரமணியும் வீட்டில் இருந்துள்ளார். இதனால், அங்கேயே பதுங்கியிருந்த இருவரும் சுப்பிரமணி வீட்டில் இருந்து வெளியேறும் வரை காத்திருந்தனர். அதன்பிறகு, சுப்பிரமணி வீட்டைவிட்டு வெளியேறிய பின், கன்னியப்பனும் சுதாகரும் வீட்டுக்குள் சென்று தங்கமணியிடம் மீண்டும் வட்டிக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தங்கமணி பணம் கொடுக்க முடியாது எனக் கூறி கடுமையாகத் திட்டியுள்ளார்.

 

அப்போது, கன்னியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்கமணியின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், போலீஸ் தங்களைப் பின்தொடர்ந்து வரக்கூடாது என நினைத்து அவரது உடலைச் சுற்றி மிளகாய் பொடி தூவியுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பியோடிய இருவரும் குளக்கரைக்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இருவரும் அணிந்திருந்த ஆடைகளை தீயிட்டு கொளுத்திவிட்டு, அதன்பிறகு அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பிவந்த சுப்பிரமணி தன் மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, விசாரணை தொடங்கிய 12 மணி நேரத்தில் கொலையாளிகளான கன்னியப்பன் மற்றும் சுதாகர் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

 

பின்னர், இருவரையும் கைது செய்த அன்னூர் தனிப்படை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதால், உறவுக்காரப் பெண்ணையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்