ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆரியப்பம்பாளையம், ராமையா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (45). பழனிசாமி விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் மாங்காய் மரம் உள்ளது. சம்பவத்தன்று அந்த மாங்காய் மரத்தில் உள்ள மாங்காயை கண்ணம்மாள் பறிக்க சென்றுள்ளார். மாங்காய் பறிக்கும் போது அதில் ஒரு மாங்காய் அருகே உள்ள புதருக்குள் விழுந்து விட்டது.
உடனே கண்ணம்மாள் அந்த புதருக்குள் கையை விட்டு மாங்காய் எடுக்க முயன்றார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அருகே தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கண்ணம்மாள் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.