கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது-
கலால் உதவி ஆணையர் அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மதுபான தொழிற்சாலை இருந்தாலும் காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சாராய வியாபாரம் பற்றி சில காவல் துறையினருக்கு தெரிந்தாலும் ஏனோ கண்டுகொள்ளவில்லை என்ற தகவல் மாவட்ட கலால் உதவி ஆணையர் ஜெயபாரதிக்கு கிடைத்தது.
இதையடுத்து எந்த தகவலும் சொல்லாமல் திடீரென தனது படையுடன் கிளம்பினார். கந்தர்வகோட்டை போன பிறகு நடுப்பட்டி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அந்த இடத்திற்கு வாகனங்களை திருப்பச் சொன்னார். உதவி ஆணையர் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது வாகனங்களில் சத்தம் கேட்டு ஆண்கள் இருவர் ஓடிவிட ஒரு பெண் மட்டும் ஓட முடியாமல் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த அதிகாரிகள் அந்த பெண் நின்ற இடத்திற்கு சென்று பார்த்த போது சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
பானைகளை அடுக்கடுக்காக அடுக்கி சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார் பெண் ரஞ்சிதம். அந்த பெண்ணை கைது செய்ததுடன் தப்பி ஓடிய மேலும் இரு ஆண்களையும் போலிசார் கைது செய்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றி சென்றனர்.
- இரா.பகத்சிங்