Skip to main content

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற கொடூர மகள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Woman arrested in her father death case

 

தென்காசி மாவட்டத்தின் இலஞ்சியைச் சேர்ந்தவர் கோட்டைமாடன் (82). கடந்த 4ம் தேதியன்று இவர், தனக்குச் சொந்தமான தோப்பில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். இது குறித்து அவரது 2வது மகள் சந்திரா அளித்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 


முதற்கட்ட விசாரணையின் போது கொலையுண்ட கோட்டைமாடனின் 3வது மகளான ஸ்ரீதேவி, மூத்த மகளின் கணவரான பரமசிவன் (57), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாவது; கொலையான கோட்டைமாடனுக்கு 3 மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மைதீன் பாத் கணவர் பரமசிவன், இரண்டாவது மகள் சந்திரா, மூன்றாவது மகள் ஸ்ரீதேவி, ஆனால் கோட்டைமாடன் தனது 2வது மகள் சந்திராவுடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் அவருக்குச் சொந்தமாக 1.82 ஏக்கரில் தோப்பும் உள்ளது. அதில் மூன்றில் இரண்டு பகுதியை தனது 2வது மகள் சந்திராவின் மகன் விஜயகுமார் பெயரில் எழுதிவைத்திருக்கிறார். இதற்கு மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீசும் இவர்கள் அனுப்பியுள்ளனர். மேலும் பரமசிவன் வீட்டில் வேலை செய்து வரும் லோடு ஆட்டோ டிரைவர் சேகர் மூலம் பேசியதில் கூலிப்படையை வைத்து கோட்டைமாடனை கொலை செய்து விடலாம் என்று ஸ்ரீதேவியும், பரமசிவனும் திட்டமிட்டுள்ளனர்.

 

Woman arrested in her father death case

 

இதன் பின் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், மற்றும் மகேஷ் இருவரிடமும் ஒரு லட்ச ரூபாய் பேசி அட்வான்ஸாக பதினைந்தாயிரம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு கூலிப்படையாகச் செயல்பட்ட வசந்தகுமார், மகேஷ் இருவரும் கோட்டைமாடனை கொலை செய்ய இரண்டு முறை முயன்றும் முடியாமல் போகவே கோட்டைமாடனிடம் தோப்பில் உள்ள மரத்தை விலை பேசி வாங்குவது போன்று செட்டப் செய்து வசந்தகுமார் மகேஷ், சேகர் மூவரும் அவரை தோப்பிற்கு வரவழைத்தனர். மரத்தை வெட்டுவது போல போக்குக் காட்டியவர்கள், கோட்டைமாடன் எதிர்பாரத நேரத்தில் திடீரென அவரைக் கம்பால் அடித்துக் கொலை செய்தனர். கம்பால் கழுத்தில் அடித்ததால் வாயிலிருந்து ரத்தம் வருவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தடயமின்றி இயற்கையாக இறந்தது போன்று காண்பிப்பதற்காகவே கம்பால் தாக்கியுள்ளனர். ஆனால் ரத்தம் வழிந்ததால் கொலை என்பது தெரிந்துவிட்டது. இது குறித்து அந்தப் பகுதியின் சி.சி.டி.வி. மற்றும் செல் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் 5 பேரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரவே மூன்றாவது மகள், மூத்த மருமகன், கூலிப்படையாகச் செயல்பட்டு மீதிக் கூலிப்பணத்தைப் பெறவந்த இருவர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.