Skip to main content

உதவித்தொகை அந்தந்த ஆண்டுகளில் ஒதுக்காவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? -உயர் நீதிமன்றம் கேள்வி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

education

 

உயர் கல்விக்கான உதவித்தொகை அந்தந்த ஆண்டுகளில் ஒதுக்காவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

உயர் கல்விக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்வி தொகையை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இந்த தொகையை  மாநில அரசு, கல்லூரிகளுக்கு வழங்கி வருகிறது.

 

 ஆனால் 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய 1,576 கோடி ரூபாய் வழங்கவில்லை என்பதாலும், தமிழக அரசு கேட்டு பெறவில்லை என்பதாலும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுவதாக வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தால் அமைச்சகத்தின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

அதனை பதிவு செய்த நீதிபதிகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் என்பது தாழ்த்தபட்ட பிரிவினருக்கான விவகாரங்களை மட்டுமே கவனிக்கும் என்பதால், பழங்குடியின மாணவர்களை கருத்தில் கொண்டு, மத்திய பழங்குடியின நலத் துறையை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.

 

மேலும், கல்வி உதவித்தொகையை அந்தந்த கல்வியாண்டில் ஒதுக்காவிட்டால்,  மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், வழக்கு குறித்து மத்திய - மாநில அரசுகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், மத்திய பழங்குடியின நலத் துறை  2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.