Skip to main content

எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம் கண்டிக்குமா? அன்புமணி ராமதாஸ்

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
 Palanisamy


 

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறினால் என்னவாகும் என்பதற்கு சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடத்தப்படும் அத்துமீறல்கள் தான் உதாரணம் ஆகும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைத்துள்ள ஆளுங்கட்சியினர்  மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பதாகைகள் அமைக்கப்பட்டதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழாவும் சென்னையில் நாளை நடைபெறவுள்ளன. அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டாலும், இது முழுக்க முழுக்க அதிமுக விழாவாகவே நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு ஆட்களை சேர்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களை அனுப்ப வேண்டும் என அவற்றின் நிர்வாகங்கள் மிரட்டப்படுவதாக மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்கனவே குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால் அதன்பிறகும் அதிமுகவினர் அடங்கவில்லை.
 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலை ஒட்டிய அண்ணா சாலையின் 1.1 கி.மீ நீளமுள்ள பகுதியில் மட்டும் ஒரு புறம் 89 பதாகைகள், மறுபுறம் 49 பதாகைகள் என மொத்தம் 138 பதாகைகள் அதிமுகவினர் சட்டவிரோதமாக அமைத்துள்ளனர். இந்த பதாகைகள் அனைத்தும்  நடைபாதைகளையும், சில மீட்டர் அகலத்துக்கு சாலையையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, 8 மின் விளக்கு கட்&அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ்  ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பதாகைகள் அமைப்பதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வளைத்து வளைத்து பதாகைகளை அமைத்துள்ளனர். விழா நடைபெறும் நந்தனத்தில் மட்டுமின்றி சென்னை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினரின் பதாகைகள் பொதுமக்களை மிரட்டுகின்றன.
 

இதனால் நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் நடந்து செல்வதால் அவர்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, வாகனப் போக்குவரத்தின் வேகம் குறைந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பேருந்து நிறுத்தங்களும் பதாகைகளால் மறைக்கப்பட்டிருப்பதால் பேருந்துகளுக்காக மக்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பதாகைகளுக்கு  சென்னை மாநகராட்சியிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் புகார் மனு அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பதாகைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது.
 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும், அமைச்சர்களும் மக்களுக்கான பணியாளர்கள் தான். அவர்கள் எவரும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தங்களின் விளம்பரப் பதாகைகளை அமைப்பதற்காக  மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் விளம்பர மோகம் காரணமாக பதாகைக் கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.  உயர்நீதிமன்ற ஆணையை மீறி ஆளுங்கட்சியினர் பதாகைகளை அமைப்பது குறித்தும், அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் உயர்நீதிமன்றம் பலமுறை அதிருப்தி தெரிவித்துள்ளது.
 

ஆனால், அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டன. இதுவரை மொத்தம் 31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலுமே விதிகளை மிதித்து விளம்பர பதாகைகளை அமைப்பது, பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களை மிரட்டி அழைத்து வருவது, மாணவர்களைக் கட்டாயப்படுத்தி விழாக்களில் பங்கேற்ற வைப்பது என உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட அனைத்து செயல்களையும் அதிமுகவினர் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
 

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே சட்டத்தை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதிமுகவினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் புரட்சியில் ஈடுபடக்கூடும். அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பதாகைகள் அமைக்கப்பட்டதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி எந்த காலத்திலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் விதிகளை மீறி பதாகைகளை அமைக்க மாட்டோம் என்று அவர்களிடமிருந்து உத்தரவாதம் பெறவும் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.