Skip to main content

சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் பிரியா ராஜன் யார்?- விரிவான தகவல்!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

Who is Priya Rajan to be elected Mayor of Chennai? - Detailed information!

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரிய மாநகராட்சியான  சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன்  தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 

200 வார்டுகளைக் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடசென்னை பகுதியான திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 74- ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியா ராஜன்,  பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 

 

28 வயதான பிரியா ராஜன் எம்.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மறைந்த முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி ஆவர். 

 

இதற்கு முன் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தென் சென்னையில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி.மு.க சார்பாக வடசென்னை பகுதியில் இருந்து மேயர் பதவியை யாரும் வகித்ததில்லை என்ற குறையைப் போக்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த பிரியா ராஜன் மேயராகப் பதவியேற்க உள்ளார். 

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பட்டியலின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை மேயராக, தென் சென்னை பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வின் மு.மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

சென்னை மாநகராட்சிக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The High Court fined the Chennai Corporation

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த அபராத தொகையான ரூ. 37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.