Skip to main content

'லூப் லைன் போல்ட் நட் கழண்டது யாரால்?'- நான்கு பேருக்கு சம்மன்

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
 'Who loosened the loop line bolt nut?'- Summons to four people

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11 ஆம் தேதி  கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்தில் சிக்கியிருந்தது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பெட்டிகள் தடம் புரண்டது. சுமார் 19க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் லூப் லைனின் சந்திப்பில் உள்ள போல்ட் நட்டுகள் கழட்டப்பட்டு கிடந்தது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் லூப் லைனின் போல்ட் நட்டுகள் சதிச் செயல் காரணமாக கழட்டப்பட்டதா என்ற கேள்விகள் இருந்து. இந்நிலையில் திட்டமிடப்பட்டு லூப் லைனின் போல்ட் நட்டுகள் கழட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே நான்கு பிரிவுகளில் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிருக்கு அல்லது உடலுக்கு காயத்தை ஏற்படுத்துவது 125a, 125b, அதிவேகமாக இயக்குதல்-281, ரயில்வே பாதுகாப்பு சட்டம்-154 என்ற சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை முடிவில் போல்ட் நட்டுகள் திட்டமிட்டு கழட்டப்பட்டுள்ளதால் இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பாதுகாப்பு சட்டப் பிரிவு தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் யார் இதனை திட்டமிட்டு நிகழ்த்தியது என்ற புள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் தொடர்புடைய நபர்கள் யார் என்பதை அறிந்து கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத், கேட் கீப்பர், ஸ்டேஷன் சூப்பிரண்ட் மற்றும் கொடி அசைப்பவர் ஆகிய நான்கு பேருக்கும் சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் நான்கு பேரும் ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்