Skip to main content

நியூசிலாந்து சென்ற 230 தமிழர்களின் கதி என்ன? மீட்க நடவடிக்கை தேவை! ராமதாஸ் 

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
Ramadoss


கேரளாவில் இருந்து படகு மூலம் 230 தமிழர்கள் நியுசிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் இதுவரை எந்த நாட்டிற்கும் சென்றடையவில்லை என்பது தெரிய வந்துள்ளதால் அவர்களை மீட்க நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நியுசிலாந்தில் தஞ்சமடையும் நோக்கத்துடன் கேரளத்திலிருந்து 230 தமிழர்கள் படகில் புறப்பட்டதும், அவர்கள் இதுவரை எந்த நாட்டிற்கும் சென்றடையவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோருடன் சென்ற அந்தப் படகு என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை.
 

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த முன்னம்பம் துறைமுகத்திலிருந்து தேவமாதா என்ற படகு  மூலம் 230 தமிழர்கள் நியுசிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டுச் சென்ற பைகள்  உள்ளிட்ட உடமைகள் முன்னம்பம் துறைமுகத்துக்கு அருகிலும், கொடுங்கலூர் என்ற இடத்திலுள்ள கோவிலிலும் கண்டெடுக்கப்பட்டன. அவை யாருக்கு சொந்தமானவை? என்பது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் பல உண்மைகள் வெளிவந்தன. அப்படகில் நியுசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்து கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத பிரபு என்பவரை பிடித்து விசாரித்த போது தான் பயணம் மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
 

படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதும், அவர்களில் பெரும்பான்மையினர் ஈழத்தமிழர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தில்லியிலும் வாழ்ந்து வந்த அவர்கள் இம்மாதத் தொடக்கத்தில் சென்னையில் கூடி, அங்கிருந்து ஜனவரி 11-ஆம் தேதி கொச்சி சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்களை  முன்னம்பம் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற பயண ஏற்பாட்டாளர்கள் 12-ஆம் தேதி படகில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் பயணத்தைத் தொடங்கி 9 நாட்கள் ஆகி விட்ட நிலையில், அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்ததாக தெரியவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.  தேவமாதா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயணித்தனர்  என்பதும், படகின் உரிமையாளர்கள் மூவரும் தலைமறைவாகிவிட்டதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
 

நியுசிலாந்துக்கு படகு பயணம் மேற்கொண்டவர்களைக் கண்டுபிடித்து மீட்பது ஒருபுறமிருக்க, இனி வரும் காலங்களில் இத்தகைய ஆபத்தான பயணங்களை யாரும் மேற்கொள்ளமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத படகில், பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, உயிரைப் பணயம் வைத்து தமிழர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை அரசுகள் உணர வேண்டும். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
 

இலங்கையில் வசதியாக வாழ்ந்த தமிழர்கள் போரின் காரணமாக தங்களின் தந்தை நாடாக கருதும்   தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். ஆனால், இங்கு அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் திபெத் அகதிகள், பர்மா அகதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உரிமைகளில் ஒரு விழுக்காடு கூட ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை.
 

அதேநேரத்தில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறும் தமிழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட தண்டனைக் காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு கண்ணியமான வாழ்க்கை வாழ வகை செய்யப்படுகிறது. நியுசிலாந்து நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அந்த நாட்டுக்குள் 1000 அகதிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1500 ஆக உயர்த்தப்படவுள்ளது. அதனால் தான் கண்ணியத்தை இழந்து வாழ்வதை விட, கடலில் இறந்தாலும் பரவாயில்லை என துணிந்து தமிழர்கள் இவ்வாறு செல்கின்றனர்.
 

ஆஸ்திரேலியக் கண்டத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாவது இது முதல்முறையல்ல. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இத்தகைய பயணங்களை மேற்கொண்ட 2500-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் விபத்தில் சிக்கியும், கடல் சீற்றம் காரணமாகவும் உயிரிழந்தனர். ஆனால், இத்தகைய உயிரிழப்புகள் எங்கும் பதிவு செய்யப்படுவதில்லை.
 

தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாவும், கவுரவமாகவும் வாழ்வதற்கு வகை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்காது. எனவே, நியுசிலாந்து நாட்டுக்கு படகுப் பயணம் மேற்கொண்ட ஈழத்தமிழர்களை கண்டுபிடித்து மீட்பதுடன்,  அனைவரையும் அவர்கள் விரும்பும் இடத்திற்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கவோ, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பில் நிம்மதியாக வாழவோ இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வகை செய்ய வேண்டும். அத்துடன் இனி இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் உள்ள  ஈழத்தமிழர்கள் அனைவரும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் வாழ அரசு வகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.