கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட உளுந்தாண்டார்கோவில் நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இக்குடியிருப்பில் இருக்கும் மக்கள் தினசரி வேலை, பள்ளி, கல்லூரி மற்றும் பல அத்தியாவசிய பணிகளுக்கு நகரின் பிரதான சாலையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சாலை, பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, குழாய்கள் புதைத்து மூடப்பட்டது. அதன்பிற்கு இந்தச் சாலையை சீரமைக்காமல், சாலையையும் அமைக்காமல் விடப்பட்டது. சிறு மழை பெய்தாலும், மழை நீரோடு மண்ணும் கலந்து சேறும் சகதியுமாக மாறுகிறது. அந்த சேறு சகதி நிறைந்த சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் தடுமாறி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. அதேபோல், மழையில்லா காலங்களில் புழுதி பறக்கும் சாலை குண்டும் குழியுமாக இருந்துவருகிறது. அதில் தடுமாறி விழுந்தும் பலருக்கு காயங்கள் ஏற்படுகிறது.
இன்று அப்பகுதி மக்கள் சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில் நாத்து நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும் தெரிவித்ததாவது, “இந்தச் சாலையை சீர் செய்யச் சொல்லி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகாராகவும் கோரிக்கையாகவும் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நாற்று நடும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். இப்போதும் இந்தச் சாலையை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அடுத்து தற்போது நடப்பட்டிருக்கும் சம்பா நெற்பயிரின் அறுவடைக்கு மாவட்ட ஆட்சியரை அழைக்கவுள்ளோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.