Skip to main content

15 ஆயிரம் கன அடியைத் தொட்ட நீர்வரத்து

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 The water flow reached 15 thousand cubic feet

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும், கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

தொடர் நீர்வரத்து காரணமாகக் கடந்த 25 ஆம் தேதி மாலையில் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி நீர் தமிழக எல்லையைக் கடந்ததால் பிலிகுண்டுலுவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்பொழுது கர்நாடக அணைகளிலிருந்து 22,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு  வருகிறது.

 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,232 கன அடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை மேட்டூர் அணைக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்து சேர்ந்த நிலையில், படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து நேற்று நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 12,444 கன அடியாக அதிகரித்த நிலையில், தற்பொழுது மாலை 4 மணி நிலவரப்படி நீர் வரத்து 15 ஆயிரம் கன அடியைத் தாண்டியுள்ளது. தொடர் மழைப் பொழிவால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்