Skip to main content

கோயில் வளாகத்தில் குடிகார ஆசாமிகள்... தட்டிக்கேட்ட பெண் வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

villupuram

 

விழுப்புரம் அருகே கோயில் வளாகத்தில் மது குடித்தவர்களைத் தட்டிக்கேட்ட பெண் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள முட்ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருணகிரி, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

 

சம்பவத்தன்று இக்கோயில் வளாகத்தில் அதே ஊரைச் சேர்ந்த அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த கோயில் பூசாரி அருணகிரி, கோயில் வளாகத்தில் இப்படிக் குடிக்கலாமா கோயிலில் சாமியை வழிபட பலர் வருவார்கள், அப்படிப்பட்ட இடத்தில் இப்படிப்பட்ட செயல் செய்வது சரியா? என்று கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் போதை ஏறிய மயக்கத்தில் அருணகிரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட அருணகிரியின் அண்ணன் ஆனந்தகுமார், அவரது மனைவி அன்பரசி ஆகியோர் அருணகிரிக்கு ஆதரவாக அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த அஜித்குமார் அன்பரசியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

 

இதையடுத்து அன்பரசி கண்டமங்கலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அஜித்குமாரை ஃசெல்போனில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இந்தத் தகவலை அஜித் குமார் தனது நண்பர்கள் இளஞ்செழியன், முரளி ஆகியோரிடம் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அன்பரசி தங்களைக் காவலர்களிடம் மாட்டி விட்டுள்ளார் என்று அன்பரசி மீது மேலும் ஆத்திரம் அடைந்து, அன்பரசியின் வீட்டுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். அந்தக் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. பின்னர் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

அன்பரசி இது குறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அஜித்குமார் அவரது நண்பர்கள் இளஞ்செழியன் முரளி ஆகிய மூவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

 

கோயில் வளாகத்தில் மது குடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசும் அளவிற்கு இளைஞர்கள் சென்றுள்ளது அக்கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.