வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. கணவனை இழந்த இவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்தை தனது பெயரில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்துவதற்காக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கனரா வங்கிற்கு வந்துள்ளார்.
அந்த வங்கி கிளையில் 50,000 ரூபாயை கட்டிவிட்டு மீதி வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பையில் வைத்திருந்துள்ளார். கனரா வங்கியில் பணம் கட்டியதை தனது வங்கி கணக்கு புத்தகத்தில் தானியாங்கி மிஷினில் பதிவிடுவதற்காக வங்கியில் உள்ள இயந்திரம் முன் வரிசையில் நின்றுள்ளார்.
![vellore district ambur vanara bank branch lady thief police](http://image.nakkheeran.in/cdn/farfuture/wNwHazvqUVfwd7Slm4qMOEp94rcVIsObED1ud6LZeEY/1573666960/sites/default/files/inline-images/vijaya555.jpg)
சிறிது நேரம் பொறுத்து தனது பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த பணம் 50 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கேயே அழுது புலம்பியவர். இது குறித்து வங்கி மேலாளர் மற்றும் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வங்கி வளாகத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயாவிடம் விசாரித்தபோது, 50 ஆயிரம் ரூபாய் இந்தியன் வங்கியில் தனது பெயரில் உள்ள கணக்கில் கட்டுவதற்காக வைத்திருந்ததாக கூறியுள்ளார். பின்னர் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில் வங்கி கணக்கு புத்தகம் அச்சிடும் இயந்திரம் முன் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த விஜயாவின் பின்புறம் ஓர் பெண் வந்து நின்று கொண்டு சுற்றும் பார்த்து, எவருக்கும் தெரியாத வகையில் விஜயா வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ள காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து பணம் கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.
கடந்த 16.09.2019 ஆம் தேதி இதே வங்கியின் முன் இருசக்கர வாகனத்தில் பணம் எடுத்த வந்த பெண்ணை திசை திருப்பி நூதன முறையில் 35 சவரன் நகை மற்றும் 45 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது வங்கிக்குள்ளேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது வங்கி நிர்வாகத்தை மட்டுமல்ல, வாடிக்கையாளர்களையும், அதிர்ச்சியடைய வைத்துள்ளது.