Skip to main content

2 கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலய மாதிரி... அசத்தும் பொற்கொல்லர்!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

 Velankanni church model in 2 gram gold .. Awesome goldsmith!

 

சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஜே. முத்துக்குமரன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலய மாதிரியைச் செய்து சாதனை படைத்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம், விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 9ஆம் வகுப்புவரை படித்துள்ள நிலையில், 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் செய்துவருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டு, பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். இவர் புதன்கிழமை (22.12.2021) அன்று 2 கிராம் 790 மில்லி கிராம் தங்கத்தில் 1.5 இன்ச் நீளமும், 1 இன்ச் உயரமும் மற்றும் அகலத்தில் மிகச்சிறிய அளவிலான வேளாங்கண்ணி தேவாலய மாதிரியை செய்துள்ளார்.

 

இவர், கடந்த 2020 ஏப்ரலில் 530 மில்லி கிராம் தங்கத்தில் கரோனா வைரஸ் கிருமியால் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை, முகக்கவசம், இந்திய வரைபடம் ஆகியவை அடங்கிய குழு செய்தார். மேலும், 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020ஆம் ஆண்டு 12 பக்க காலண்டரையும், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டட உருவத்தையும், 120 மில்லிகிராம் தங்கத்தில் ஓட்டு விற்பனை இல்லை என்ற பாதகை, 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2018 ஆண்டு சவுதியில் உள்ள புகழ்பெற்ற மெக்கா, மதினா உருவங்களை 640 மில்லி கிராமில் 1 செ.மீட்டர் உயரத்தில் தங்கத்திலும், மேலும் அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 Velankanni church model in 2 gram gold .. Awesome goldsmith!

 

இதுகுறித்து முத்துக்குமரன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தங்க நகைகள் செய்வதில் இயந்திர பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பொற்கொல்லர்களின் தொழில்கள் கீழ்நிலையை நோக்கிச் செல்கிறது. இதனால் பல தொழிலாளர்களின் நிலைமை கஷ்டமான சூழலில் உள்ளது. எனவே இந்த தொழிலை மேம்படுத்தும் விதமாக கைகளாலும் இதுபோன்ற நுணுக்கமான முறையில் செய்யலாம் என்பதை வலியுறுத்துவதற்காகவும் அதே நேரத்தில் நாட்டில் அனைத்து செயல்களிலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செய்துவருவதாக கூறினார். அதே நேரத்தில், கிறிஸ்துமஸ் தினத்தில் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் வேளாங்கண்ணி தேவாலய மாதிரியை செய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்