Skip to main content

நிரம்பியது வீராணம் ஏரி... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
Veeranam Lake is full ... Farmers and the public are happy!

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் சுமார் 44,856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாவாதாரம் பாதுகாக்கப்படுகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறையினர் கீழணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு ஏரியை நிரம்பும் நோக்கோடு கடந்த 15 நாட்களாக  வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைத்தனர். தற்போது படிப்படியாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து ஏரி நிரம்பி அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும், ஏரியை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், சென்னைக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்க முடியும்.  இதனால்  இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் சிலர் குமராட்சி பகுதியில்  குறுவைை சாகுபடி செய்துள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே  ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் திறப்பதாக கூறியுள்ளனர். குறுவை சாகுபடியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்