Skip to main content

“திரள் நிதியிலோ பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல...” - வருண்குமார் ஐபிஎஸ்

Published on 25/08/2024 | Edited on 25/08/2024
Varun Kumar IPS Crictized seeman

அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் குறித்து பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதேநேரம் சமூக வலைத்தளப் பக்கங்களில் சிலர் தன்னையும் மற்றும் எனது குடும்பத்தினரையும் விமர்சித்து வருவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். புகாரும் அளித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான் சார்பில் விளக்க நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து தானும் தன் மனைவியும் தற்காலிகமாக வெளியேறுவதாக அருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக என் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் அவமதிக்கின்றனர். என் குழந்தைகள், குடும்பத்தினர் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். 

பயத்தினாலோ அருவருப்பினாலோ இந்த முடிவை எடுக்கவில்லை. தற்காலிகமாக நானும் எனது மனைவியும் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து விலகுகிறோம். போலி கணக்குகளில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வக்கிர புத்தி கொண்டவர்கள் தான் அவமானப்பட வேண்டும். ஆன்லைன் அப்யூஸ் என்பது இரும்பு கரங்களால் ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன். எவ்வித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், சீமானுக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெறும் நிலையில், வருண்குமார் ஐ.பி.எஸ் வாட்ஸ் அப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வான புகைப்படத்தை வெளியிட்டு கூறியதாவது, ‘சிலரைப் பொல் பிச்சை எடுத்து வந்தது அல்ல, இரவு பகலாக ரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி படித்து உழைத்து பெற்ற பதவி ஐ.பி.எஸ் உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கி சட்டை. என்றும் காக்கி மேல் உள்ள காதல் தொடரும். பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ?’ என்று பதிவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்