Skip to main content

மத்திய அமைச்சர் என் வீட்டிற்கு வந்து டீ குடித்து விட்டு சென்றார்.. காவிரி விவகாரம் குறித்து பேசவில்லை!- தம்பிதுரை

Published on 05/04/2018 | Edited on 05/04/2018


காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகம் போராட்டக்களமாக காட்சி அளிக்கிறது.

இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரச்சினையால் அ.தி.மு.க. முடக்கி வருகிறது.

இதுகுறித்து, அதிமுக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

காவிரி பிரச்சினையில், நாடாளுமன்றத்தில் நாங்கள் 20-வது நாளாக போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த போராட்டம் மேலும் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மீண்டும் அடுத்த கூட்டத்தொடரிலும் இதே போராட்டத்தை நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கைக்கு 1974-ம் ஆண்டில் இருந்தே மத்திய அரசுகள் செவி சாய்க்காமல்தான் இருந்து வருகின்றன. அதனால்தான் மக்கள், மாநில கட்சிகளுக்கு ஓட்டுப்போடுகிறார்கள். தேசிய கட்சிகளுக்கு வாக்கு அளிப்பது இல்லை. காவிரி பிரச்சினையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்.

மத்திய அமைச்சர் விஜய் கோயல் என்னை சந்தித்ததில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவர் என் வீட்டுக்கு வந்தார். டீ குடித்து விட்டு சென்றார். காவிரி போராட்டம் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தமிழக ஆளுநர் பன்வாரலால் புரோகித்தும் எனக்கு நண்பர்தான். அவரை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஆளுநரிடம் பேச முடியாது. மந்திரிகளிடம்தான் பேச முடியும் ஆளுநருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு; உடனடியாக செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Ramadoss welcomed  central govt approval of the plan to clean up  Cauvery river

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான  ”நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை செயல்படுத்துவதற்கு  மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது.  ஐந்தாண்டுகளுக்கும் மேலாக  கிடப்பில் போடப்பட்டிருந்த காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு  மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன.  தமிழ்நாட்டில்  தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் இருந்து காவிரியில்  பெருமளவில் கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. பொதுமக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாழ்பட்டு போன  காவிரியை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

காவிரியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ’காவிரியைக் காப்போம்' என்ற தலைப்பில் கடந்த, 2017-ஆம் ஆண்டு ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை  விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். புனித நதியாக போற்றப்படும் காவிரி, நச்சு நதியாக மாறி வருவதை  நாம்  தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மத்திய  அரசிடமிருந்து  மானியமாகவும், இன்னொரு பகுதியை  தமிழக அரசின் பங்களிப்பாகவும் கொண்டு, மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் நிதிக்காக காத்திருக்காமல்  தமிழக அரசு அதன் சொந்த நிதியில்  காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Increase in water flow in Cauvery

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவானது அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 3,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் கடந்த 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.