
சென்னையில் இன்று (19/02/2021) நடைபெற்ற வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொய்ப் பிரச்சாரம் செய்து அரசியல் செய்யும் சூழல்தான் நாட்டில் உள்ளது. கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாடுகளை அழைத்துச் சென்று விடுகிறார்களா? விவசாயிகளிடம்தானே மாடு உள்ளது; தற்போது பால் உற்பத்தியில் இந்தியாதான் நம்பர் ஒன் நாடாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்கு எப்படி பதில் சொல்ல முடியும்? வேளாண் சட்டங்களால் வரக்கூடிய ஆதாயம் வேண்டாம், இடைத்தரகர்களின் ஆதாயம் முக்கியம் என எதிர்க்கின்றனர். விவசாயிகளுக்காக அரசியல் கட்சியினர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழகத்திற்கு நல்லாட்சிக் கிடைக்க வேண்டும்; வேல் யாத்திரையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயிலுக்கே செல்லாதவர்கள் தற்போது கோயிலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியால் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட இல்லாதபோதும் குறை வைக்காமல் செயலாற்றி வருகிறார் பிரதமர். தமிழகத்தை பிரதமர் மோடி புறக்கணிக்கவில்லை. இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்டவர் பிரதமர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள், தற்போது மோடி அரசைக் குறைகூறுகின்றனர். நாங்கள் இடையூறு அரசியல் செய்பவர்கள் அல்ல; தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.