போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளனவா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

அதில், சேலம் மாவட்டத்தில் பிப். 14-ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இந்தப் போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மனுதாரர் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.