
சென்னை திருவான்மியூர் அருகே துப்புரவுப் பணியாளர் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரங்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் சென்னை திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் இருக்கக்கூடிய பகுதியில் பணியாளர் பெண்கள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் வழக்கம்போல் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஐடி பணியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அஸ்வின் என்ற நபர் தூக்கக் கலக்கத்தில் காரை மோதியதில் சிவகாமி என்ற பெண் துப்புரவுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பணியாற்றிய சக பணியாளர் பெண்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ''ஐயோ... மூளையே வெளியே வந்திருச்சே'' என சக பணியாளர் கதறி அழுதது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப் பணியாளர் சிவகாமிக்கு 3 குழந்தைகள் இருக்கிறது. அவருடைய உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவருடைய உடலைப் பெற உறவினர்கள் சோகத்துடன் வெளியே காத்திருக்கின்றனர்.