தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நிதித்துறைக்கு பொறுப்பாக, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருந்த சண்முகம், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்முகம் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார் சண்முகம், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நிதித்துறை செயலராக பொறுப்பு வகித்து வருகிறார்.

--LINKS CODE------
திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் நிதித்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக உள்ள அவர், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் திறம்பட செயல்பட்டு நிதிச்சுமையை பெருமளவு குறைத்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகம் ஐ.ஏ.எஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் சந்திப்பை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை புதிய தலைமை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை தலைமை செயலகத்தில் புதிய தலைமை செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.