Skip to main content

கடலூரில் கஜாவுக்கு மூன்று பேர் பலி! மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

கடலூரில் கஜா புயலையொட்டி நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை கனமழை  விட்டு விட்டு பெய்தது. அவ்வப்போது காற்றும் பலமாக வீசியது.

 

காற்றினால் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள்,  மின் கம்பங்கள் சாய்ந்தன. சாய்ந்த மரங்களை அகற்றும் பணியிலும், மின் கம்பங்களை சரி செய்து மின் இணைப்புகள் கொடுக்கும் பணியிலும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பலகிராம புறங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

 

kaja

 

என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரும், மழை நீரும் அதிகரித்ததால் மேற்கு பரவனாற்றில் வெள்ளம் அதிகரித்து 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் வடலூர் அடுத்த மேலக்கொளக் குடியில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பின்னர் வடிந்தது. 

 

kaja

 

விருத்தாசலம் அடுத்த மே.மாத்தூரில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரும் இவரது மனைவி  அய்யம்மாள் மற்றும் 3 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.  இரவு முதல் கனமழை பொழிந்ததால் ராமச்சந்திரன் வீட்டில் அடுக்கி வைத்திருந்த, ஹாலோ பிளாக் சரிந்து  விழந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த கணவன்,  மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயத்துடன் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு,  காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதில் அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகள் சபரீஸ்வரி ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

kaja

 

இதேபோல் குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த்(40) என்பவரும்,பண்ருட்டி நடுக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் எனும் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த போது மரம் விழுந்தும் பலியாகினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.