Skip to main content

முதியவர் மரணத்தில் விலகிய மர்மம்; விசாரணையில் வெளியான பகீர் தகவல் 

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Three arrested in Namakkal old man case

 

பள்ளிபாளையம் அருகே, முதியவரின் மரணத்தில் இருந்த மர்மம் விலகியது. பள்ளி வளாகத்தில் மது குடிப்பதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மூன்று பேர் முதியவரை தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (78). இவர், கடந்த மார்ச் 30ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்த கட்டிலில் சடலமாகக் கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய பள்ளிபாளையம் காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த முதியவர், மூச்சுத் திணறலால் இறந்திருப்பது தெரிய வந்தது. அதேநேரம் அவருடைய நெஞ்சில் உள் காயமும் இருந்ததால், அவரை யாராவது  கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.    

 

முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு வாலிபர்கள் சிலர் அந்த முதியவருடன் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து,  பள்ளி வளாகத்திற்குள் அடிக்கடி வந்து செல்லும் உள்ளூரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், வஉசி நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (21), கூலித்தொழிலாளிகள் பிரபு ராம் (19), மாணிக்கம் (19) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நடராஜை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.  

 

லாரி ஓட்டுநரான மணிகண்டன், வெளியூர் சென்று வரும்போது மதுபானங்கள் வாங்கி வருவதும், அடிக்கடி அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து மது குடிப்பதும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். சம்பவத்தன்றும் மணிகண்டனும் கூட்டாளிகளான பிரபு ராம், மாணிக்கம் ஆகியோரும் அந்தப் பள்ளிக்குள் சென்று மது குடித்துள்ளனர். இதைக்கண்ட முதியவர் நடராஜ், அவர்களை சத்தம் போட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அவர்கள், ஆத்திரத்தில் அந்த முதியவரை தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகும் அவர்கள், கீழே கிடந்த கல்லைத் தூக்கி நெஞ்சின் மீது போட்டுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்த பிறகு மூவரும் அங்கிருந்து  தப்பிச்சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்தது.

 

பள்ளி வளாகத்திற்குள் மது குடிக்கக் கூடாது என்று சொன்னதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை குமாரபாளையம் நீதித்துறை  நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.