Skip to main content

“பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

"There shouldn't be any barrier to women's education" - Chief Minister Stalin's speech

 

சொந்தத் தொகுதியான கொளத்தூருக்குச் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

அவரது உரையில், ''மாணவிகள் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைகளுக்குப் போக நகரப் பேருந்துகளில் இலவச பயணம். உண்மையிலேயே இந்த இலவச பயணத்தால் பலர் மாதம் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தி கல்வி செலவுக்கு பயன்படுத்தி இருப்பீர்கள் என்று மனதார நம்புகிறேன். படிக்கும்போது பாடத்திட்டத்தை தாண்டி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்காகத் தான் 'நான் முதல்வன்' என்ற ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கியுள்ளோம். அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

 

இரண்டு நாட்களாக பத்திரிகை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்... படிப்பதற்காகவும், வேலைக்காகவும் வெளியூர் போக வேண்டும் என்றால் பெண்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதியாக 'தோழி விடுதிகள்' ஹாஸ்டல் ஆரம்பித்திருக்கிறோம். குடும்பத் தலைவிகளாக இருக்கக்கூடிய உங்களது அம்மாக்கள் மற்றும் சகோதரிகளுக்கு வரும் செப்டம்பர் அண்ணா பிறந்தநாள் அன்று முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம். பசியில் வாடாமல் இருக்க காலையில் பள்ளிக்கு வந்ததும் காலை உணவு திட்டம் இப்படி ஒவ்வொரு கட்டமாக பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டி வருகிறோம். இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு எல்லோரும் நல்லா படிக்க வேண்டும்.

 

இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னைச் சந்திக்கும் பொழுது, 'உயரமான பதவியில் இருக்கிறோம்; இவ்வளவு பெரிய ஆளாகிட்டோம்' என்று பெருமையோடு நீங்கள் சொல்லக்கூடிய அளவிற்கு அந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் கிடையாது. பெண் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது. கல்வியை யாராலும் திருட முடியாது. அதுதான் நிலையான சொத்து. எவ்வளவு பணிகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் எனக்கு புது உற்சாகம் பிறக்கிறது. தமிழகத்திற்கே முதல்வராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு நான் தான் சட்டமன்ற உறுப்பினர். மக்கள் அன்பால்தான் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்