Skip to main content

’’ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புகள் இல்லை’’ - எடப்பாடி பழனிசாமி

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
e e

 

காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று கூறினார்.

 

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடக்க விழா இன்று (மே 12, 2018) நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். விழா முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியது: ’’தமிழகத்தில் வேளாண் தொழில் சிறக்க, தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வழங்கப்படுகிறது.

 

மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது அனைவரும் அறிந்ததுதான். இப்போதைய சூழ்நிலையில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை நீர் திறந்து விட வாய்ப்புகள் இல்லை. இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருக்கும். இதன்மூலம் அணைகள் நிரம்பும்.

 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

சேலம் மாவட்டம் வழியாக அமைக்கப்படும் பசுமை வழிச்சாலை திட்டத்தின் மூலம், பல்வேறு தொழிற்சாலைகள் வரும். வெளிநாடுகளில் இருந்து ஏராளமான முதலீடுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் தொழில் வளம் பெருகும். இந்த
திட்டத்திற்கு அனைவரும் வரவேற்பு அளிக்க வேண்டும்.

 

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.’’

 

young

 

முன்னதாக அவர் ஏற்காடு கோடை விழாவைத் தொடங்கி வைத்து பேசியதாவது: ’’ஏற்காடு கோடை விழாவை இந்த ஆண்டு பசுமை விழாவாகக் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, முதன்முதலாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது. தரைதளத்தில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவதில் இந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

 

ஏற்காட்டில் அடுத்தக் கல்வி ஆண்டு முதல், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி திறக்கப்படும். ஏற்காடு மற்றும் கருமந்துறை ஆகிய மலைப்பகுதிகளில் இரண்டு மினி பேருந்து சேவை தொடங்கப்படும்.
மலைப்பகுதிக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வரும்படி இந்த பேருந்துகள் இயக்கப்படும்.’’


அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேட்டூர் அருகே இருதரப்பினர் மோதல்; போலீஸ் குவிப்பு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Clash between two sides near Mettur; police presence

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரிபுரம் என்ற பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இஸ்லாமியர்கள் தகன பூமி ஒன்று உள்ளது. இந்த நிலப்பரப்பிற்கு அருகே பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பலர் வசித்து வரும் நிலையில், தங்கள் குடியிருப்பு அருகே உடல்களை அடக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு சடலம் ஒன்று புதைப்பதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில், அதைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அந்த பகுதி மக்கள் உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கேட்டு சாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.