
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறவர்களுக்கு அரசியல் கட்சியினரும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
அதுபோல் தேனி மாவட்டம் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டம் என்பதால் தனது தொகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் மலை வாழ்மக்களுக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும், எம்.பி. ஒ. பி.ரவீந்திரநாத்குமாரும் அரிசி உள்பட மளிகைப் பொருட்களை நிவாரண உதவிகளாக வழங்கியதுடன் மட்டுமல்லாமல் துப்புரவு பணியாளர்களுக்கும் பண உதவிகளை வாங்கினார். அதுபோல் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவான மகாராஜனும் ஆண்டிபட்டி உள்பட சில பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் ஹவேஸ் மலை பகுதிக்குச் சென்று காய்கறிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.
இந்த நிலையில் தான் தேனி மாவட்ட திமுக முன்னாள் பொருப்பாளரும்,மாநில தீர்மானக்குழு செயலாளருமான ஜெயக்குமாரும் கம்பம் ஒன்றியத்திலுள்ள கரு நாக்க முத்தன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கக்கூடிய 2,000 பொதுமக்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களுடன் காய்கறிகளையும் வழங்கினார். அதுபோல் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் காய்கறிகளுடன் முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பொருட்களையும் வீடு வீடாகச் சென்று ஜெயக்குமார் வழங்கினார். இதில் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதுபோல் கம்பத்தில் மாவட்ட பொருப்பாளர் ராமகிருஷ்ணன், பெரியகுளத்தில் முன்னாள் நகரச் செயலாளர் செல்லப்பாண்டி, போடியில் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் உள்பட திமுக கட்சி பொறுப்பாளர்களும் தங்களால் முடிந்த முடிந்த அளவுக்குப் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். இப்படித் தேனி மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு நிகராக எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.