Skip to main content

தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

Teni district gonna reach 13,000 corona cases

 

 

தேனி மாவட்டத்தில் இன்று காலை வரை புதிதாக 70 பேருக்கு தொற்று  உறுதி செய்யபட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

 

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி கண்டறியப்பட்டது அதிலிருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து தற்போது 12 ஆயிரத்து 910 பேர் வரை  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 149 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை 11 ஆயிரத்து 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1,122 பேர் தேனி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் சிகிச்சை மையங்கள் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

நேற்று மட்டும் 50 பேருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தேனி பகுதியில் 29 பேரும் ஆண்டிபட்டி பகுதியில் 8 பேரும் போடி பகுதியில் 22 பேரும் சின்னமனூர் பகுதியில் நான்கு பேரும் கம்பம் பகுதியில் 10 பேரும் பெரியகுளம் பகுதியில் நான்கு பேரும் உத்தம பாளையம் பகுதியில் மூன்று பேரும் அடங்குவார்கள். இன்று காலை வரை மேலும் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று  உறுதியானதால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 973 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரியகுளம் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண் தேனி நகராட்சி பகுதியை சேர்ந்த 65 வயதுள்ள ஆண் என இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 211 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதுபோல் மாவட்ட அளவில் நேற்று மட்டும் ஆயிரத்து 80 பேருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இப்படி நாளுக்கு நாள் தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பீதி அடைந்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்