நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அதிமுக கானை ஒன்றியத்தில் செயலாளராக உள்ளார் முத்தமிழ்ச்செல்வன். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி ஆர் மன்ற இணைச்செயலாளராக ரெட்டியார்ப்பட்டி வெ.நாராயணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுகவிற்கு சவால் இல்லை. மேலும் இரு தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.